புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் இந்த தேதியில் அறிமுகமாகிறதா? புதிய தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!
புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் அறிமுக தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பு 2022ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்யவுள்ள மிகப்பெரிய லான்ச்களில் ஒன்று புதிய தலைமுறை பிரெஸ்ஸா. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூன் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கிடையே புதிய தலைமுறை பிரெஸ்ஸா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில அரேனா டீலர்ஷிப்களில் புதிய தலைமுறை பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் இருந்து வருகிறது. 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கடந்தது. அதை தொடர்ந்து 7 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கடந்தது.

இப்படி சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா காரின் வெற்றி கதையை மேலும் தொடர்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. எனவேதான் பல்வேறு விதங்களிலும் அப்டேட் செய்யப்பட்ட பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஒரு சமயத்தில் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் காராக இருந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. இதற்கு பிறகு பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் காராக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இருந்து வருகிறது.

பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்க கூடிய காராக இருந்தாலும், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு உகந்ததாக இல்லை.

குறிப்பாக டாடா நெக்ஸான் காரின் எழுச்சி, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராகவும் டாடா நெக்ஸான் உருவெடுத்துள்ளது. எனவே இந்த போட்டியை சமாளிக்கும் வகையிலும், விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் மட்டுமின்றி, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடனும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிடும். இதில், ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








