நிறைய பேரு வாங்க மாட்டாங்க நினைச்சா, இப்பவே இத்தனை பேரு புக் பண்ணிட்டாங்களா! நம்பமுடியாத வரவேற்பு!

சீனாவைச் சேர்ந்த பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அண்மையில் இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பு இது ஆகும். கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்றே இதன் அதிகாரப்பூர்வ வருகை அமைந்தது.

பிஒய்டி அட்டோ 3 ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. சொகுசு வசதிகளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களைக் குறி வைத்தே இதனை சீன நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வாகனத்திற்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.

பிஒய்டி அட்டோ 3

சுமார் 1,500 புக்கிங்குகளை இந்தியர்களிடத்தில் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றிருப்பதாகவே நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த மின்சார கார்களில் ஒன்றாக இதன் வருகை அமைந்துள்ளது. இதன் விலை ரூ. 33.99 லட்சம் ஆகும். இந்த அளவு அதிக விலையில் இந்த சீன கார் விற்பனைக்கு வரும் என யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

இதேபோல், விற்பனைக்கு வந்த சில வாரங்களிலேயே இந்த அளவு புக்கிங்குகளை இந்த கார் அள்ளி குவித்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையிலேயே அனைவரையும் அசர வைக்கும் விதமாக புக்கிங்குகளை பிஒய்டி அட்டோ 3 பெற்றிருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த காரை வெகு விரைவில் டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2023 ஜனவரி மாதத்திலேயே எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அமோக வரவேற்பு வரவேற்பிற்கு அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களை மிக தாராளமாக பெற்றிருப்பதே காரணமாக இருக்கின்றது. ஆமாங்க, சீன நிறுவனம் இந்த மின்சார காரை விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கியிருக்கின்றது. அட்டோ3 எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பிற நாடுகளில் இதே வாகனம் 49.92kWh பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக நம் நாட்டில் பெரிய பேட்டரி பேக் தேர்வுடன் அட்டோ 3 களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த 60.48 kWh பேட்டரி பேக்கை 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் முழுமையாக 10 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த மின்சார காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரையே பிஒய்டி வழங்கியிருக்கின்றது.

இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க ஏற்கனவே கூறியதைப் போல் மிக தாராளமான சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யக் கூடிய திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது. இவற்றுடன், சிந்தெட்டிக் லெதர் இருக்கைகள், பன்முக வண்ணங்களில் ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட் ஆகியைவும் அட்டோ 3இல் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாதுகாப்பு அம்மசங்களும் இந்த காரில் மிக ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏழு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், அடாஸ் எனும் மிக முக்கியமான தொழில்நுட்பமும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் வாயிலாக தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதி ஆகியவற்றில் மிக அசத்தலான தயாரிப்பாக பிஒய்டி அட்டோ 3 உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த அம்சங்களே தற்போது இந்தியர்களை வெகுவாகக் காரணமாக இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Atto 3 e car received 1500 bookings
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X