இந்தியர்களை வசியம் பண்ணும் சீன நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்! டாடாவையே தட்டி தூக்கற மாதிரி ஸ்கெட்ச் போட்றாங்க!
சீனாவை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று பிஒய்டி (BYD). 'Build Your Dreams' என்பதன் சுருக்கம்தான் BYD. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பிஒய்டி நிறுவனம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3) மற்றும் பிஒய்டி இ6 (BYD E6) ஆகும். இதில், முதலாவது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதே சமயம் இரண்டாவது எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

2023ம் ஆண்டில் 15 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற இலக்கை எட்டுவதை பிஒய்டி நிறுவனம் நோக்கமாக வைத்துள்ளது. பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சஞ்சய் கோபாலகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''விற்பனைக்கு அறிமுகம் செய்ததில் இருந்து, இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த ஆண்டு அட்டோ 3 மற்றும் இ6 ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களையும் 15 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்'' என்றார்.
விற்பனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணிகளிலும் பிஒய்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2022ம் ஆண்டை 21 நகரங்களில், 24 டீலர்ஷிப்கள் என்ற அளவில் நிறைவு செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அடுத்த 2023ம் ஆண்டில் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை 53 ஆக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிஒய்டி இந்தியா நிறுவனம் எடுத்து வருகிறது.
இதுகுறித்து சஞ்சய் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''இந்தியாவில் வெற்றிகரமான கார் நிறுவனமாக இருக்க வேண்டுமென்றால் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்கு நிலையான நெட்வொர்க் இருக்க வேண்டும். 21 நகரங்களில் 24 அவுட்லெட்கள் என்ற எண்ணிக்கையுடன் நடப்பாண்டை நிறைவு செய்வோம். அடுத்த ஆண்டு 15 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதால், அவுட்லெட்களின் எண்ணிக்கையை 53 ஆக உயர்த்துவோம். பல்வேறு நகரங்களில் அவை அமைக்கப்படும்.
எங்களின் டீலர்கள் ஒர்க் ஷாப்களை திறப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரிய அளவில் சர்வீஸ் தேவைப்படாது. ஆனால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது எங்களுக்கு முக்கியமானது. எனவே எங்களின் டீலர்கள், தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களுடன், ஒர்க் ஷாப்களையும் வைத்திருப்பார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது'' என்றார். பிஒய்டி இந்தியா நிறுவனம் தனது தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு கற்பிப்பதையும் தனது விற்பனை யுக்திகளின் ஒரு பகுதியாக வைத்துள்ளது.
அத்துடன் விற்பனைக்கு பிந்தைய சேவையை சிறப்பாக வழங்குவதன் மூலமும், தனது ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களை படையெடுக்க வைக்க பிஒய்டி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சஞ்சய் கோபாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், ''விற்பனைக்கு பிந்தைய சேவைகளை சிறப்பாக செய்தால், விற்பனை நன்றாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நிறைய வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருவார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தால், அவர் மற்றவருக்கும் பரிந்துரை செய்வார்.
எனவே ஒர்க் ஷாப்களை திறக்கும்படி எங்கள் டீலர் பார்ட்னர்களிடம் கூறியுள்ளோம். சென்னையில் எங்களுக்கு கிடங்கு உள்ளது. இங்கே அட்டோ 3 மற்றும் இ6 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போதுமான அளவில் ஸ்பேர் பார்ட்ஸ்களை 'ஸ்டாக்' வைத்துள்ளோம். எனவே எங்கள் டீலர்களுக்கு தொடர்ச்சியாக சப்ளை கிடைக்கும். அத்துடன் எங்கள் டீலர்களின் டெக்னீசியன்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியும் வழங்கி வருகிறோம். எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் இந்த பயிற்சி மிகவும் முக்கியமானது'' என்றார்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. வேறு எந்த நிறுவனமும் இங்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில்லை. ஆனால் பிஒய்டி நிறுவனம் சிறப்பான விற்பனை யுக்திகளின் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் 15 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் விற்பனை செய்து விட்டால், அது நிச்சயமாக சாதனைதான்.
இந்த சாதனையை பிஒய்டி இந்தியா நிறுவனம் படைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஏனெனில் பிஒய்டி ஆட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 1,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இது நமக்கு கடைசியாக கிடைத்த தகவல் ஆகும். தற்போது முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காருடன், பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் காரும் இந்த நிறுவனத்தின் சேல்ஸ் டிரைவர்களாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








