இன்று தேசிய சுற்றுலா தினம்!! தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற கார் மாடல்கள் - இதோ!
ஊரடங்கு காலம் நிச்சயம் நம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து அவ்வப்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்ற ஊரடங்குகள் நம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பாடங்களை கற்று கொடுத்துள்ளன.

அதேநேரம் சில சந்தோஷங்களுக்கும் ஊரடங்குகள் வழிவகை செய்கின்றன. அதாவது, வார இறுதி விடுமுறை நாட்களில் ஊரடங்குகள் அமலுக்கு கொண்டுவரப்படுவதால் பெரும்பாலானோர் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுலா பகுதிகள் தற்சமயம் சற்று கூட்டம் குறைவானதாகவே காட்சியளிக்கின்றன.

எனவே தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு இது சரியான தருணமே. அதுமட்டுமின்றி, இன்று (ஜனவரி 25) தேசிய சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் இந்திய சந்தையில் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விற்பனை செய்யப்படும் கார்கள் சிலவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிட்டி
எஸ்யூவி, எம்பிவி என புதியதாக கார்கள் ஏகப்பட்டவை வெளிவந்தாலும், செடான் காரில் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வது என்பது தனி அலாதியானதுதான். இந்திய சந்தையில் செடான் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்றாலும், ஹோண்டா சிட்டி செடான் கார்கள் வரிசையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் சவுகரியம் என மூன்றிலும் இந்த ஜப்பானிய செடான் மாடல் நீண்ட தொகுப்பினை கொண்டுள்ளது. மென்மையான ஹேண்ட்லிங் மற்றும் ஸ்போர்டியான உடற் அமைப்பு ஹோண்டா சிட்டியை தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாக விளங்க வைக்கின்றன. விற்பனையில் இதற்கு போட்டியாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஸ்லாவியா செடான் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700
கடந்த 2021ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகும். இந்த காரின் சிறப்பம்சங்களை பற்றி ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டோம். புதிய மஹிந்திரா லோகோ உடன் முற்றிலும் மாடர்ன் காராக கொண்டுவரப்பட்டுள்ள இது முழு-எஸ்யூவி கார்கள் பிரிவில் பல அம்சங்களை முதன்முறையாக பெற்றுவந்துள்ளது.

இதனால் இந்த மஹிந்திரா எஸ்யூவி காருக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருவதினால், இதனை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான கால அளவும் அதிகமாக உள்ளது. அதிநவீன ஓட்டுனர் உதவி வசதிகள் ஏகப்பட்டவை வழங்கப்படுவதால் எக்ஸ்யூவி700 மாடல் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த காரில் அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வும் வழங்கப்படுவதால், ஆஃப்-ரோடுகளுக்கும் பயமின்றி இதனை எடுத்து செல்லலாம்.

மஹிந்திரா தார்
தொலைத்தூர பயணமாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்வதாக இருந்தாலும், இடையில் ஆஃப்-ரோடுகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆதலால் தொலைத்தூர பயணங்களுக்கு தேர்வு செய்யப்படும் வாகனம் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்றதாக இருந்தால் கூடுதல் நல்ல விஷயமாகும். பொதுவாக, இந்தியாவில் பெரும்பாலான சுற்றுலா தடங்கள் மலைகளையும், மலைப்பாதைகளையும் சார்ந்தவையாகவே உள்ளன. இவற்றில் எந்தவொரு பிரச்சனையுமின்றி ஏறும் அளவிற்கு திறன் கொண்டதாக கார் இருந்தால் நிச்சயமாக உங்களது சுற்றுலா பயணம் ஜாலியானதாக இருக்கும்.

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தார் எஸ்யூவி வாகனத்தில் அப்டேட்டாக ஏகப்பட்ட புதிய வசதிகள் & நீண்ட வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லலாம் என்பது கூடுதல் பயனாக இருக்கும் என்றாலும், தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும் அளவிற்கு தாரில் இருக்கைகள் மிகவும் சவுகரியமானதாக வழங்கப்படுகின்றனவா? என்றால்... கொஞ்சம் சந்தேகம்தான். இதனால் பயணத்திற்கு இடையே இடையே கொஞ்சம் வாகனத்தை ஓரம் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கியா கார்னிவல்
சற்று விலைமிக்கதுதான், ஆனால் கியா கார்னிவலில் மிகவும் விசாலமான இருக்கை அமைப்பு, மஸாஜ் உள்ளிட்ட செயல்பாடுகளை கொண்ட கேப்டன் இருக்கைகள் வழங்கப்படுவதால் தொலைத்தூர பயணமாக இருப்பினும், பயணத்தில் எந்தவொரு அசவுகரியமும் ஏற்பட வாய்ப்பில்லை. எம்யூ வாகனமான இதில் அதிகப்பட்சமாக 8 பேர் வரையில் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

இதில் இருக்கைகளை பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து கொள்ளும் வசதியையும் கியா வழங்குகிறது. இதில் பொருத்தப்படுகின்ற 2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. கார்னிவலின் விலை அதிகம், அதற்கேற்ப இந்த காரினை பராமரிப்பதும் சற்று செலவுமிக்க விஷயம் தான். என்றாலும் மகிழ்ச்சியான & சொகுசான வார இறுதி சுற்றுலா பயணங்களை விரும்புவோர் கார்னிவலை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








