நெருங்கி கொண்டிருக்கும் ஆப்பு... இப்பவே ஏதாச்சும் நல்ல முடிவை எடுத்தாதான் டாடாவால தப்பிக்க முடியும்!
டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் இ-சி3 எலெக்ட்ரிக் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டு வரும் தனது நடவடிக்கையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலிவு விலையில் சி3 ஹேட்ச்பேக் ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஏற்கனவே சி5 ஏர்கிராஸ் எனும் பிரீமியம் தர காரை விற்பனைக்கு வந்தநிலையில் புதிதாக சி3-யையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பாகும். வெகு நீண்ட மாதங்களாக சி5 ஏர்கிராஸை மட்டுமே விற்பனைச் செய்து வந்தநிலையில், தனது இரண்டாவது தயாரிப்பாக சி3-யை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையிலேயே தனது வர்த்தக நடவடிக்கையை விரிவாக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
இதன் அடிப்படையில் நிறுவனம் புதிய இ-சி3 காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ஓர் மின்சார காராகும். இந்த காரை சி3 அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. இதனை சி3 ஹேட்ச்பேக் காரின் மின்சார வெர்ஷன் என கூறலாம். இதனையே இந்தியாவிற்கான மூன்றாவது தயாரிப்பாக சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை நிறுவனத்தின் ஸ்டெல்லண்டிஸ் குழுமத்தின் சிஇஓ-ஆன கர்லஸ் டவரெஸ்-ம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை அரங்கேறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். ஆனால், துள்ளியமான அறிமுக தேதி பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை. சிட்ரோன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்திய மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, மலிவு விலை எலெக்ட்ரிக் காரை விரும்புவோர்களின் கவனத்தை இந்த கார் வெகுவாக ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் வெர்ஷன் சி3 ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆகையால், இந்த இ-சி3-யும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கம் தகவலின்படி சிட்ரோன் இ-சி3 10 லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கின்றன. இந்தளவு குறைவான விலையில் இ-சி3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் எனில் டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-க்கு கடுமையான போட்டியாளராக அமையும்.
இந்த காரே இந்தியாவின் மலிவு விலைக் கொண்ட 4 சீட்டர் பயணிகள் வாகனம் ஆகும். ரூ. 8.49 லட்சத்திற்கு டியாகோ இவி இந்திய சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதை விட குறைவான அல்லது சற்று அதிக விலையிலேயே சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சார கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் நிறுவனம் 30.2 kWh பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்எஃப்பி ரக செல்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதனை சீன நிறுவனமான ஸ்வோல்ட் இடம் இருந்து சிட்ரோன் பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இத்துடன், வீட்டிலேயே வைத்து இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக நிறுவனம் 3.3 kW ஏசி சார்ஜிங் கருவியையும் நிறுவனம் வழங்க இருக்கின்றது. அதேநேரத்தில் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வீட்டில் வைத்து சார்ஜ் செய்வதைக் காட்டிலும் அதிக வேகத்திலும், விரைவாகவும் காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் என்ன மாதிரியான மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்கிற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 63 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது 84.5 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் கூடிய விரைவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








