“இந்திய அரசாங்கத்துடன் ஏகப்பட்ட சவால்கள் உள்ளன” - டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து எலானின் கருத்து!!
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டுவரும் டெஸ்லாவின் இந்திய வருகை குறித்த தங்களது தற்போதைய நிலைப்பாட்டினை டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா ஆகும். இதன் சிஇஓ-வாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் உள்ளார். அமெரிக்காவில் தோன்றிய இந்த நிறுவனம் மெல்ல மெல்ல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் விரிவடைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உள்பட பல வெளிநாட்டு சந்தைகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டெஸ்லா தான் முன்னிலையில் உள்ளது. இந்த வகையில், யுகே-வில் எரிபொருள் என்ஜின் கார்களையும் சேர்த்து, கடந்த 2021ஆம் ஆண்டில் அதிகளவில் விற்கப்பட்ட 2வது காராக டெஸ்லாவின் மாடல் 3 எலக்ட்ரிக் செடான் கார் முன்னேறியுள்ளதாக சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

இதில் இருந்து பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக கோலோச்சிட முடியாது என கூறப்படும் சீனாவில் கூட எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டெஸ்லா தற்சமயம் முன்னிலையில் உள்ளது.

ஆனால் சீனாவிற்கு அடுத்து உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் நம் இந்தியாவில் இன்னமும் டெஸ்லா களம்புகவில்லை. இந்தியாவிலும் தங்களது கார்களை விற்க விரும்புவதாக எலான் மஸ்க் கடந்த 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூறியிருந்தார். அவர் கூறி கிட்டத்தட்ட 3 வருடங்கள் உருண்டோடி விட்டன.

இந்த 3 வருடங்களில் பலக்கட்ட பேச்சுவார்த்தைகளிலும், நடவடிக்கைகளிலும் டெஸ்லா ஈடுப்பட்டு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் நாடு முழுவதுமே கார் ஆர்வலர்கள் டெஸ்லாவின் வருகையினை ஆவலாக எதிர்நோக்கி உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர் டுவிட்டரில் எலான் மஸ்க்கினை குறிப்பிட்டு, "எதாவது அப்டேட் உள்ளதா? டெஸ்லாவின் இந்திய வருகை எப்போது?" என வினாவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எலான், "அரசாங்கத்துடனான ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில் இதற்கான வேலைப்பாடுகளில் உள்ளோம்" என தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இவ்வாறான கேள்விகள் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் எலானிடம் கேட்கப்படுகின்றனர். இதில் சிலரது கேள்விகளுக்கு எலானும் பதிலளித்து வருகிறார்.

இந்திய அரசாங்கம் டெஸ்லாவினை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய நிர்பந்திக்கிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கார்களை வெளிநாட்டில் தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசை வேண்டி வருகிறார்.

இது எலான் மஸ்க்கின் இதற்கு முந்தைய டுவிட்டர் பதிவுகளில் வெளிப்பட்டிருந்தது. பட்ஜெட் விலையில் காரை வாங்கும் விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாட்டில் ஆரம்பத்தில் சிபியூ (CBU- completely build unit) முறையில் வாகனங்களை விற்பனை செய்வதுதான் நிறுவனத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பது எலானின் கருத்து.

ஆனால் சீனாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமாக தொழிற்சாலை உள்ளது. உலகளவில் தற்சமயம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க மொத்தம் 4 தொழிற்சாலைகள் டெஸ்லா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 1 தொழிற்சாலை சீனாவில் இருக்க, மீதி 3 தொழிற்சாலைகள் அமெரிக்காவில் உள்ளன. இவற்றின் மூலமாகவே உலகளவில் தங்களது எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்படும் தேவைகளை டெஸ்லா தீர்த்து வருகிறது.

இதனால் மத்திய அரசாங்கம் அனுமதியளித்தால் இந்தியாவிற்கான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் நமது அண்டை நாடான சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். இதன் காரணமாகவே உள்நாட்டில் தொழிற்சாலையை உருவாக்க டெஸ்லாவை ஆளும் மோடி அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஏனெனில் சீன தயாரிப்பு எதிர்ப்பு நம் நாடு முழுவதுமே பரவலாக உள்ளது. இந்தியாவில் சாலைகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை என்பதும் டெஸ்லாவின் வருகையில் ஏற்படும் தாமதத்திற்கு காரணமாகும்.


Click it and Unblock the Notifications








