மஹிந்திரா தார் வாகனத்தின் போட்டி மாடலின் விலை ரூ.51,000 அதிகரிப்பு- எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14 லட்சத்தை தாண்டியது
இந்திய சந்தையில் பிரபலமான மஹிந்திரா தார் எஸ்யூவி வாகனத்திற்கு போட்டியாக விளங்கும் ஃபோர்ஸ் குர்காவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.51,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் புதிய குர்கா எஸ்யூவி வாகனத்தை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. ஆனால் இதற்கு முன்பே 2020இல் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

உட்புறம் மற்றும் வெளிப்புற என இரு பக்கங்களிலும் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா அப்டேட்களை பெற்று வந்துள்ளது. முரட்டுத்தனமான தோற்றம் அப்படியே தொடரப்பட்டுள்ள நிலையில், அப்டேட்களினால் மொத்த வாகனமும் முற்றிலும் மாடர்னாக மெருக்கேறியுள்ளது. இத்தகைய வாகனத்தின் விலையினை தான் புதிய ஆண்டின் துவக்கத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.

புதிய ஆண்டு துவங்கியதில் இருந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் விற்பனை வாகனங்களின் விலைகளை உயர்த்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு துவங்கி 1 வாரமே ஆனாலும், தற்போதுவரையில் ஏகப்பட்ட விலை அதிகரிப்புகளை பார்த்துவிட்டோம். இவற்றில் சில விலை உயர்வுகள் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை அல்ல. அதாவது, அதன் அறிமுகத்தில் இருந்து அல்லது கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆண்டு முடியும் வரையில் சிறுக சிறுக மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்புகளாக இருக்கும்.

ஒரு காலாண்டர் ஆண்டின் இறுதியில் அவை மொத்தமாக கணக்கிடப்படும். ஆனால் புதிய அவதாரத்தில் சமீபத்திய அறிமுகத்திற்கு பிறகு ஃபோர்ஸ் குர்காவின் விலை முதல்முறையாக ரூ.51,000 உயர்த்தப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.14.10 லட்சமாக உள்ளது. ஆனால் அறிமுகத்தின் போது குர்காவின் இந்த விலை ரூ.13.59 லட்சமாக இருந்தது.

இந்த விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துவரும் உற்பத்தி செலவின் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த விலை உயர்வுக்கு ஏற்ப எந்தவொரு அப்டேட்டும் வழங்கப்படவில்லை. மஹிந்திரா தாருக்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும் ஃபோர்ஸ் குர்கா, ‘பேபி' மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் கிட்டத்தட்ட அதன் தோற்றத்தையே குறைவான பரிமாண அளவுகளில் கொண்டுள்ளதை போல் இந்த ஃபோர்ஸ் எஸ்யூவி வாகனம் விளங்குகிறது.

இதன் வெளிப்புறத்தில் சில முக்கியமான அம்சங்கள் என்று பார்த்தால், வட்ட வடிவிலான ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், பருமனான பொனெட் & ஃபெண்டர்கள், கருப்பு நிறத்தில் முன் & பின்பக்க பம்பர்கள், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், டோ ஹூக், ரூஃப் ராக், ஸ்னோர்கில் மற்றும் பின்பக்க கதவில் பொருத்தப்பட்ட கூடுதல் சக்கரம் உள்ளிட்டவை உள்ளன.

சிவப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் க்ரே என மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. உட்புறத்தில் புதிய ஃபோர்ஸ் குர்கா 4 இருக்கைகளை கொண்டது. இதன் கேபினில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர் ஜன்னல்கள், 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி மற்றும் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஃபோர்ஸ் குர்காவில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இது 4-சக்கர-ட்ரைவ் அமைப்பின் வாயிலாக என்ஜினின் ஆற்றலை அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

ஆஃப்-ரோடு பயணங்களுக்காக முன்பக்க மற்றும் பின்பக்க டிஃப்ரென்ஷியல் லாக்குகள் இந்த எஸ்யூவி வாகனத்தில் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா தார் தற்போதைக்கு 3-கதவு வெர்சனில் மட்டுமே கிடைக்கிறது. 5-கதவு தாரை வடிவமைக்கும் பணியில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது. அதேபோல், ஃபோர்ஸ் மோட்டார்ஸும் 5-கதவு குர்கா மாடலின் வடிவமைப்பில் இறங்கியுள்ளது.

கூடுதல் கதவுகள் சேர்கிறது என்றால், உட்புற கேபினில் கூடுதல் இடவசதி உருவாகிறது என்று அர்த்தம். இதன் மூலமாக பின் இருக்கை வரிசை பயணிகளுக்கும், பொருட்களை வைத்து செல்லவும் இடம் கிடைக்கும். அறிமுகத்திற்கு முன்பு பலமுறை புதிய தலைமுறை குர்காவின் ஸ்பை படங்கள் கிடைத்திருந்தன. அறிமுகத்திற்கு பிறகு, சமீபத்தில் 5-கதவு குர்கா சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications








