சென்னை ஆலையில் மீண்டும் உற்பத்தி பணிகளை தொடங்கியது ஃபோர்டு... இப்பவே டபுள் ஷிஃப்டில் இயங்க ஆரம்பிச்சுட்டாங்க!
ஃபோர்டு (Ford) நிறுவனம் மீண்டும் இந்தியாவில் உற்பத்தி பணிகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) இந்தியாவில் மீண்டும் உற்பத்தி பணிகளைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு ஆலையே மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர ஒப்புக் கொண்டதை அடுத்து, இந்த ஆலையில் மீண்டும் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு நிறுவனம் மாபெரும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வந்த காரணத்தினால் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பேரதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக, நிறுவனத்தை நம்பியிருந்த ஊழியர்களை நிறுவனத்தின் வெளியேற்றம் அறிவிப்பு பெருத்த கலக்கத்திற்கு ஆளாக்கியது.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்திற்கு எதிராக அதன் ஊழியர்கள் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் களமிறங்கினர். தங்களுக்கான நியாயமான சலுகைகளுடன் இழப்பீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்காக பல மாதங்களாக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், தற்போது ஒரு சிலர் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வேலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

ஆகையால், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தி பணிகளைக் கையில் எடுத்திருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உற்பத்தி பணியில் ஈடுபட நிறுவனம் அனுமதி அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் 150 பேர் மட்டுமே தற்போது உற்பத்தியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர்.

அதேநேரத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,600 என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே 150 பணியாளர்களுடன் ஃபோர்டு சென்னை ஆலை மீண்டும் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. ஜூன் 14ம் தேதி முதல் இரட்டை ஷிஃப்ட்களில் இந்த ஆலை இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், "சென்னை ஆலை தற்போது இரட்டை ஷிஃப்டுகளில் ஜூன் 14ம் தேதியில் இருந்து இயங்கி வருகின்றது. 300க்கும் அதிகமானோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை விரைவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

சிலர் நிர்வாகத்திற்கு விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் திட்டமிட்டிருக்கின்றது. தொடர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஊதியம் பிடித்தல், சலுகை ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், பணியில் ஈடுபட்டு வரும் 150 பணியாளர்களையும் வெளியில் வந்து தங்களுடன் சேர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இந்த அழைப்பை நிராகரித்து பலர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கியிருக்கின்றனர். இவர்களுக்காக கணிசமான சிறப்பு திட்டங்களை வழங்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

நிறுவனம் மிக குறைவான பட்டியலையே ஏற்றுமதிக்காக வைத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே உற்பத்தி பணிகளை அது தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தாலும், சில உயர் நிலை மாடல்களை மட்டும் இறக்குமதி வாயிலாக விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஃபோர்டு மஸ்டாங் போன்ற நிறுவனத்தின் சில முன்னணி வாகன மாடல்கள் விரைவில் இந்தியா சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








