எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க மீண்டும் இந்தியா வருகிறதா ஃபோர்டு? மத்திய அரசின் முயற்சிக்கு கிடைக்க போகும் பலன்!!
இந்தியாவில் தொழிற்சாலையை மூடி கிட்டத்தட்ட 6 மாதங்களாகிவிட்ட நிலையில், ஃபோர்டு மோட்டார் மீண்டும் இந்தியாவில் கார்கள் தயாரிப்பை துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான & பழமையான அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஃபோர்டு மோட்டார்ஸ் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிர்ச்சிக்கர அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக கார்கள் விற்பனையில் போதிய அளவில் இலாபம் காண முடியாததால் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மொத்தம் 2 தொழிற்சாலைகளை கொண்டிருந்தது. இதில் பெரும்பான்மையான ஃபோர்டு கார்கள் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலையில் தான் முதற்கட்டமாக தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்பே வெறும் 25% கார்களை தயாரிக்க மட்டுமே ஃபோர்டு பயன்படுத்தி வந்த நமது சென்னை தொழிற்சாலை மூடப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது, மத்திய அரசாங்கத்தின் PLI (உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தின் கீழ் மீண்டும் ஃபோர்டு தனது கார்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தொலைத்தொடர்பு துறையின் இயக்குனர் கபில் ஷர்மா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டோமொபைல் துறைக்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஃபோர்டின் முன்மொழிவை அங்கீகரித்ததற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உலகளாவிய மின்சார வாகன புரட்சியின் மூலம் ஃபோர்டு தனது வாடிக்கையாளர்களை வழிநடத்தி வருகிறது.

இந்த நிலையில், இவி உற்பத்திக்கான ஏற்றுமதி தளமாக இந்தியாவில் ஒரு ஆலையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்றார். கபில் ஷர்மா அவர்களின் இந்த அறிக்கையின்படி பார்க்கும்போது, உள்நாட்டு சந்தைக்கான எலக்ட்ரிக் கார்களுக்காக மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான எலக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் உருவாக்க ஃபோர்டு திட்டமிட்டு வருவதை அறிய முடிகிறது.

இதற்காக மூடப்பட்ட தொழிற்சாலைகளில் ஒன்றை இந்தியாவில் மீண்டும் திறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாம். ஆனால் எந்த தொழிற்சாலை அது? எப்போது துவங்கும்? என்ற கேள்விகளுக்கு தற்போதைக்கு விடை இல்லை. மீதி இருக்கும் ஒரு தொழிற்சாலையை ஏற்கனவே திட்டமிட்டதுபோல் விற்க ஃபோர்டு முடிவெடுத்துள்ளதாம். இவை இரண்டிலும் முன்பு எரிபொருள் என்ஜின் கார்களே தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்த செய்தி உண்மையாகுமெனில், எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் வகையில் தேர்வு செய்யப்படும் ஃபோர்டு தொழிற்சாலையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் புதிய தொழிற்நுட்ப கருவிகளை வாங்க வேண்டி இருக்கும். இவ்வாறான மாற்றங்களுக்காக ஃபோர்டு இந்தியா நிறுவனம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாற்றியமைக்கப்படும் தொழிற்சாலையில் ஃபோர்டின் முற்றிலும் புதிய தோற்றத்திலான எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முன்பு விற்பனை செய்யப்பட்ட கார்களில் எலக்ட்ரிக் மோட்டார்களை பொருத்தி எலக்ட்ரிக் கார்கள் என விற்பனை செய்ய ஃபோர்டு விரும்பாது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என்று இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் மிகவும் வலுவான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மற்ற உலக நாடுகளில் ஃபோர்டு பிராண்டில் இருந்து பல புதுமையான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து சந்தைப்படுத்த விரும்பினால், அவற்றையே கொண்டுவரும். முற்றிலும் புதிய ஹைப்ரீட் மற்றும் முழு எலக்ட்ரிக் வாகனங்களை உலகளவில் உருவாக்குவதற்காகவே 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக ஃபோர்டு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இருப்பினும், மீண்டும் இந்திய வருகை எப்போது இருக்கும் என்பது குறித்து கபில் சர்மா கூறுகையில், "இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மஸ்டாங் கூபே உள்ளிட்ட பிரபலமான வாகனங்களை வழங்கவே ஃபோர்டு திட்டமிட்டு வருவதால், இதுகுறித்து தற்போது எந்த குறிப்பிட்ட விவாதமும் இல்லை" என எதிர்மறையாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








