இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க டாடா ஹெரியர் கார் இதுதானாம்!! அதிகப்பட்சமாக 225 பிஎச்பி ஆற்றலில் இயங்கக்கூடியது!
இந்தியாவிலேயே ஆற்றல்மிக்க டாடா ஹெரியர் காராக, 225 பிஎச்பி ஆற்றல் உடன் ஹெரியர் எஸ்யூவி கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸின் வெற்றிக்கரமான மாடல்களுள் ஹெரியரும் ஒன்றாகும். டாடாவின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட ஹெரியர் ஆனது இந்தியாவில் பலர் விரும்பி தேர்வு செய்யக்கூடிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்குகிறது.

கடைசியாக ஹெரியருக்கு கடந்த 2020இல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்கிரேடினை வழங்கி இருந்தது. இந்த அப்டேட்களின் ஒரு பகுதியாக ஹெரியரின் செயல்படுதிறனும் சற்று மேம்படுத்தப்பட்டது. இதன்படி, ஹெரியரின் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு 140 பிஎஸ்-இல் இருந்து 170 பிஎஸ் ஆக அதிகரித்தது.

ஆனால் இங்கு ஒரு ஹெரியர் கார் இதனை காட்டிலும் கூடுதல் இயக்க ஆற்றலை கொண்டதாக, சுமார் 225 பிஎச்பி வரையிலான என்ஜின் ஆற்றலை பெறக்கூடியதாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெரியர் கார் தொடர்பாக நிக் ஜீக் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இந்த வீடியோவில் நாம் பார்ப்பது எக்ஸ்டி+ வேரியண்ட்டின் அடிப்படையிலான ஹெரியரின் டார்க் எடிசனாகும். இந்த மாடிஃபை ஹெரியர் காரின் உரிமையாளர் பெயர் சுபம் பகுல். இவரது இந்த ஹெரியர் டார்க் எடிசன் காரை இதற்குமுன்பும் நமது செய்தித்தளத்தில் பார்த்தது போன்று ஞாபகம் இருக்கலாம். ஏனெனில், அதிக உறுமும் சத்தத்தை வெளிப்படுத்தக்கூடிய ஹெரியர் என இந்த காரை பற்றி முன்பு ஒருமுறை நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

வழக்கமான ஹெரியர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இது அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த குறிப்பிட்ட மாடிஃபை ஹெரியர் காரில் இந்த டீசல் என்ஜின் முதற்கட்ட திருத்தங்களுக்கு பிறகு 228 பிஎஸ் மற்றும் 470 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.

என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் ஆனது பயண சூழலை பொறுத்து மாறக்கூடும். ஆதலால் இந்த மாடிஃபை ஹெரியர் காரில் அதிகப்பட்சமாக 220- 228 எச்பி வரையிலான ஆற்றலை பெறலாம். இது ஹெரியரின் வழக்கமான இயக்க ஆற்றலை காட்டிலும் 57 பிஎச்பி மற்றும் 120 என்எம் டார்க் திறன் வரையில் அதிகமாகும். மேலும் இந்த திருந்தங்களின் மூலமாக இந்த குறிப்பிட்ட ஹெரியர் காரில் உள்ள என்ஜின் 1,800 ஆர்பிஎம்-இல் இருந்தே ஆற்றலை வெளிப்படுத்த துவங்குகிறது.

இதனால் என்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது குலுங்கல் என்பது முற்றிலுமாக இருக்காது. கூடுதல் மைலேஜ் தர வேண்டுமென்றால், காரின் என்ஜின் வேகத்தினை 1,800 ஆர்பிஎம்-மிற்கு கீழேயே வைத்திருப்பது நல்லது. 1,800 ஆர்பிஎம்-மிற்கு பிறகே டர்போசார்ஜர் செயல்பாட்டிற்கு வருகிறது. இதன் பின்னரே கூடுதல் இயக்க ஆற்றல் விரைவாக ஆரம்பிக்கும் என மேலுள்ள வீடியோவில் தெரிவிக்கின்றனர்.

என்ஜின் இசியூ -வில் மாடிஃபை நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளதால், இவ்வாறு டாடா மோட்டார்ஸின் டீசல் என்ஜின் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது. அதேபோல் என்ஜின் அமைப்பில் காற்று வடிக்கட்டி புதிய ஒன்றால் மாற்றப்பட்டுள்ளது. இதனாலும் கூடுதல் ஆற்றல் கிடைக்க பெற்றுள்ளது. இவை தவிர்த்து இந்த ஹெரியர் காரின் மற்ற இயந்திர பாகங்களில் வேறெந்த மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

இந்த மாற்றங்களினால் என்ஜினின் ரெட் லைன் 6,000 ஆர்பிஎம் -ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஹெரியர் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 215கிமீ வேகத்தை எட்டலாம். இந்த காரில் வழக்கத்தை காட்டிலும் என்ஜின் வேகமாக செயல்படுகிறது. இதனால் வயரிங் பழுதுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதற்கு வேற செலவு செய்ய நேரிடலாம் என இப்போதே வீடியோவில் உரிமையாளர் வருத்தப்படுகிறார்.

ஏனெனில் ஏற்கனவே இந்த மாடிஃபிகேஷன் பணிகளுக்காக ரூ.40,000 இவரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு விட்டது. என்ஜின் இசியூ -வின் வரைப்படத்தை மாற்றியமைத்ததற்காக ரூ.32,000மும், புதிய காற்று சுத்திகரிப்பானுக்கு ரூ.8,000மும் கட்டணமாக பெற்றுள்ளனர். அத்துடன் இந்த ஹெரியர் காரில் ஏகப்பட்ட ஆடியோ கருவிகள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக காரின் எடை கிட்டத்தட்ட 200 கிலோ வரையில் அதிகரித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications








