இனி பாக்கவே முடியாதா? கலங்கி போன ஹோண்டா சிட்டி காரின் ரசிகர்கள்... கண்ணீர் சிந்த வெச்சுட்டாங்களே!
ஹோண்டா சிட்டி காரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலுடன் சேர்த்து, ஒரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹோண்டா சிட்டி மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது.

ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், சிட்டி செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தற்போது தயாராகி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எனவே வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோண்டா சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட் செய்யப்படும் இந்த ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்தில் புதிய பம்பர்கள் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உட்புறத்தை பொறுத்தவரையில், வயர்லெஸ் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கூடுதலான கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகள் போன்றவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹோண்டா சிட்டி காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காரில் தற்போது 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினை பிஎஸ்6 பேஸ்-2 விதிமுறைகளுக்கு (BS6 Phase 2 Norms) மேம்படுத்த வேண்டுமென்றால், அதிகமாக செலவாகும்.
இதற்காக ஹோண்டா நிறுவனம் கூடுதல் தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்தால், சிட்டி காரின் டீசல் இன்ஜின் மாடல் விற்பனைக்கு வருவதை இனி நாம் பார்க்க முடியாத சூழல் உருவாகலாம்.
டீசல் இன்ஜின் ஆப்ஷன் நீக்கப்படுகிறது என்பது, ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல், 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. இதில், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 121 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 1.5 லிட்டர், முழு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படும். பெட்ரோல் இன்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஹைப்ரிட் பவர்ட்ரெயின் இருக்கும்.
ஹோண்டா சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், டீசல் இன்ஜின் ஆப்ஷன் நீக்கப்படலாம் என்ற தகவல், அவர்களை வருத்தமடைய செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) உள்ளிட்ட கார்களுடன் ஹோண்டா சிட்டி போட்டியிட்டு வருகிறது. சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின் இந்த கார்களுக்கு போட்டி அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








