இந்தியாவின் எஸ்யூவி மார்கெட் அனல் பறக்க போகுது! அடாஸ் அம்சம் கொண்ட டபிள்யூஆர்வி உடன் போட்டிக்கு தயாரான ஹோண்டா!
நெக்ஸான், பிரெஸ்ஸா உள்ளிட்ட எஸ்யூவி கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் அதன் டபிள்யூஆர்-வி புதிய தலைமுறையை உருவாக்கியிருக்கின்றது. இந்த காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை டபிள்யூஆர்-வி காரை வெளியீடு செய்திருக்கின்றது. ஹோண்டா கார் பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான இந்த கார் முதலில் இந்தோனேசியாவிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. முற்றிலும் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் டிசைனில் இக்காரை ஹோண்டா நிறுவனம் மறு வடிவமைப்பு செய்திருக்கின்றது.

இந்த புதிய தலைமுறை டபிள்யூஆர்-வி எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள், நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்குள்ளாகவே இந்த வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்யும் என தெரிவிக்கின்றன.

இது இந்தியாவில் களமிறங்கும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூரஸ் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.

மிக முக்கியமாக ஹூண்டாய் கிரெட்டாவிற்கு இந்த காரின் வருகை மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த காரை முற்றிலுமாக மாற்றியிருக்கின்றது. ஆகையால், புதிய தோற்றத்தில் டபிள்யூஆர்-வி காட்சியளிக்கின்றது. ஃபங்க்கியான க்ராஸோவர் தோற்றத்தை இது பெற்றிருக்கின்றது. இதற்காக பல்வேறு பிரீமியம் அம்சங்களை இந்த காரில் ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் இந்த வாகனத்தை இரு விதமான பேக்கேஜ்களின்கீழ் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ மற்றும் ஆர்எஸ் எனும் பேக்கேஜ்களே அவை ஆகும். இதில், ஆர்எஸ் கூடுதல் சிறப்பு அலங்காரத்தைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள், சிவப்பு நிற அக்செண்டுகள், ஆர்எஸ் எனும் பேட்ஜ்களால் அக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இதேபோல் பெரிய மற்றும் கவர்ச்சிகரமான அமைப்பிலான க்ரில்லும் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ஹெட்லைட்டுடன் இணைக்கப்பட்ட புதிய எல்இடி டிஆர்எல்கள், பிளாஸ்டிக் கிளாடிங்குகள் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4.2 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற நவீன அம்சங்கள் பலவும் புதிய டபிள்யூஆர்-வி காரில் ஹோண்டா வழங்கியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி போட்டியாளர்களுக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இன்னும் பல பிரீமியம் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப், 6 ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை டபிள்யூஆர்-வி காரில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் எக்கசக்கமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஏர் பேக்குகள், லேன் கீப்பிங் அசிஸ்ட், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ மேட்டிக் ஹைபீம் அசிஸ்ட், லேன் வாட்ச், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹோண்டா நிறுவனம் இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 121 எச்பி பவரையும், 145 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜினே தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி ஆகிய தேர்வுகளுடன் சிட்டி விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








