சேல்ஸ் ரொம்ப டவுன் ஆயிருச்சு... விட்டதை பிடிக்க கியா களமிறக்க போகும் புதிய கார்... எகிறும் எதிர்பார்ப்பு!
கியா இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை கியா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் கியா நிறுவனத்தின் விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பது இதன் மூலமாக தெரியவந்துள்ளது. கியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் வெறும் 7,797 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் 11,818 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் வருடாந்திர ரீதியில் பார்த்தால் கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை 34 சதவீதம் குறைந்துள்ளது. வருடாந்திர ரீதியை போல் மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

ஏனெனில் கியா இந்தியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,214 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 7,797 ஆக குறைந்துள்ளது. இது 45 சதவீத வீழ்ச்சியாகும். கியா இந்தியா நிறுவனம் தற்போதைய நிலையில் மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகியவைதான் அந்த மூன்று கார்கள். இதில் கியா செல்டோஸ் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. சொனெட் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. கார்னிவல் காரானது, சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனம் கேரன்ஸ் என்ற புத்தம் புதிய காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இது எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் எஸ்யூவி மற்றும் எம்பிவி செக்மெண்ட்களில் கியா நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருவது புரிகிறது. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள கியா கேரன்ஸ் காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி வெகு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. ஆனால் விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே இந்த காரை வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். கியா கேரன்ஸ் காரின் விலை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தற்போது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வீசி வருகிறது.

இதன் காரணமாக கியா கேரன்ஸ் காரின் அறிமுகம் தள்ளி போகுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக நிறைய கார்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லை என்பதால், கியா கேரன்ஸ் காரின் அறிமுகம் தள்ளி போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய கார்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிடும். இதன்பின் இன்னும் பல்வேறு தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கியா நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

இதில், ஏற்கனவே விற்பனையில் உள்ள செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களும் அதிகளவில் பிரபலமாகி வருகின்றன. ஆனால் கியா இந்தியா நிறுவனத்திடம் தற்போது ஒரு எலெக்ட்ரிக் கார் கூட இல்லை.

எனினும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கியா நிறுவனம் இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கியா செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு இன்னும் அதிக காலம் ஆகலாம்.


Click it and Unblock the Notifications








