அதிகம் மைலேஜ் தரலனா ரிட்டர்ன் கொடுத்திடலாம்... மிக துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட மஹிந்திரா! சூப்பருங்க!
தன்னுடைய வர்த்தக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ட்ரக் ரக வாகனங்கள் அதிக மைலேஜை தரவில்லை என்றால் அவற்றை எங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம் என மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை இந்தியாவிற்காக அறிவித்திருக்கின்றது. "அதிக மைலேஜை பெறுங்கள் இல்லையென்றால் டிரக்கை திரும்பி கொடுங்கள்" (Get Highest Mileage or Give Truck Back) என்கிற திட்டத்தையே நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் கார் விற்பனையை போல் வர்த்தக ரீதியாக இயங்கக் கூடிய ட்ரக் மற்றும் பேருந்து ஆகிய வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மஹிந்திரா ட்ரக் மற்றும் பேருந்து (Mahindra Truck and Bus) எனும் பிரிவில் இந்த வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பிரிவை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே மஹிந்திரா நிறுவனம் புதிய அதிரடி திட்டத்தை மிகவும் துணிச்சலுடன் அறிவித்திருக்கின்றது. ஆனால், நிறுவனம் 'ட்ரக்' என குறிப்பிட்டிருப்பதால் அவற்றிற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது தெரிகின்றது.

அதேநேரத்தில், பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெவி, நடுநிலை மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் தங்களுடைய தயாரிப்புகள் அதிகம் மைலேஜ் தரக் கூடியவை என மிக உறுதியாக நம்புகின்றது.

தன்னுடைய இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையிலேயே புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய பிளாஸோ எக்ஸ் எச்சிவி, ஃப்யூரியோ ஐசிவி மற்றும் எல்சிவி மாடல்களான ஃப்யூரியோ 7 மற்றும் ஜயோ ஆகிய மாடல்களே அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களாக நம்புகின்றது.

இவற்றிற்கே தன்னுடைய மைலேஜ் குவாரண்டீ திட்டத்தை மஹிந்திரா அறிவித்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், அதிக மைலேஜை பெறுங்கள் இல்லையென்றால் டிரக்கை திரும்பி கொடுங்கள் எனும் திட்டத்தை 2016ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. பிளாஸோ எக்ஸ் ஹெவி ட்ரக்குகளுக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரை 33 ஆயிரம் யூனிட் வரை பிளாஸோ எக்ஸ் ட்ரக்குகளை மஹிந்திரா நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. ஆனால், இவற்றில் ஒன்று கூட மைலேஜ் குறைவாக வழங்குவதாக கூறி ரிட்டர்ன் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து ட்ரக் வாகனங்களையும் ப்யூவல் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றது. இத்துடன், பாஷ் ட்ரீட்மெண்ட் சிஸ்டத்துடன் கூடிய மில்ட் இஜிஆர் தொழில்நுட்பத்தையும் மஹிந்திரா பயன்படுத்தி இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்து குறைந்த எரிபொருள் பயன்பாட்டை செய்து, மஹிந்திரா ட்ரக்குகளை அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களாக மாற்றுகின்றன.

மஹிந்திரா அதன் ஹெவி ட்ரக்குகளில் 7.2 லிட்டர் எம்-பவர் எஞ்ஜினை பயன்படுத்துகின்றது. இதன், ஐ மற்றும் எல்சிவி ரக வாகனங்களில் எம்டிஐ தொழில்நுட்பம் அடங்கிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வாகனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம் கூடுதல் சிறப்பு திட்டமாக விற்பனைக்கு பிந்தைய இரு சிறப்பு சர்வீஸ் வாரண்டியையும் வழங்குகின்றது.

ஒரு வேலை மஹிந்திரா ட்ரக் சாலையில் பிரேக்-டவுண் ஆகி நின்றால் 48 மணி நேரத்தில் அதனை திருப்பிக் கொண்டு வந்து தருவது மஹிந்திரா நிறுவனத்தின் முதல் உத்தரவாதம் ஆகும். அப்படி 48 மணி நேரத்திற்கு ட்ரக் மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்றால் நாள் ஒன்றிற்கு ட்ரக்கின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருக்கின்றது.

அதுவே, 36 மணி நேரத்திற்கு மேல் வாகனம் ரெடியாகாமல் இருந்தால் நாள் ஒன்றிற்கு 3,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நிறுவனத்தின்கீழ் நூற்றுக் கணக்கான வர்த்தக வாகன விற்பனையகங்கள், 210 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள், 1600 உதிரிபாக விற்பனையக நெட்வொர்க்குகள் மற்றும் 34 எம் பார்ட்ஸ் பிளாசாக்கள் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








