1கிலோ சிஎன்ஜிக்கு 40கிமீ மைலேஜ் தரும்! ரூ. 2.57 லட்சத்துக்கு தரமான பயணிகள் ஆட்டோவை அறிமுகம் செய்தது மஹிந்திரா!
ஒரு கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் சுமார் 40 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய பயணிகள் ஆட்டோ மற்றும் கார்கோ ஆட்டோவை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் புதிய ஆல்ஃபா சிஎன்ஜி பயணிகள் மற்றும் கார்கோ வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக இன்று (ஜூன் 8) அறிவித்துள்ளது. ஆல்ஃபா டிஎக்ஸ் என்கிற பெயரில் பயணிகள் வாகனத்தையும், ஆல்ஃபா லோடு பிளஸ் என்கிற பெயரில் கார்கோ வாகனத்தையும் அது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இதில், பயணிகள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஆட்டோவிற்கு அறிமுக விலையாக 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், கார்கோ பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டிருக்கும் வாகனத்திற்கு 2 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இந்த வாகனங்களின் வாயிலாக பெருமளவில் சேமிப்பை அதன் உரிமையாளர்களால் பெற முடியும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. அந்தவகையில், ரூ. 4 லட்சம் வரை சேமித்துக கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே ஓர் டீசல் வாகனத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஏற்படும் செலவாகும்.

இந்தியாவின் குறிப்பிட்ட மஹிந்திரா விற்பனையாளர்களிடத்தில் மட்டுமே இப்புதுமுக வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், உபி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பிஹார், ஜார்கண்ட், கேரளா மற்றும் மபி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சிஎன்ஜி பயணிகள் ஆட்டோ மற்றும் கார்கோ ஆட்டோ விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த பகுதிகளிலேயே சிஎன்ஜி விற்பனை நிலையங்கள் அதிகளவில் உள்ளன. எனவேதான் இந்த பகுதிகளை மையப்படுத்தி மஹிந்திராவின் புதிய தயாரிப்புகள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது ஆட்டோ கேஸ் விற்பனையகங்களே அதிகளவில் உள்ளன. மேலும், சிஎன்ஜி விற்பனையகங்கள் இல்லாத நிலை தென்படுகின்றது.

இதன் காரணத்தினாலேயே தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையில்கூட இது விற்பனைக்குக் கொண்டுவரப்படாத நிலை தென்படுகின்றது. தற்போது இந்தியாவின் லக்னோவில் டீசல் லிட்டர் ஒன்று ரூ. 90.92-க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், சிஎன்ஜி கிலோ ஒன்றே ரூ. 68.1 -க்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டீசலைக் காட்டிலும் 21 ரூபாய் வரை குறைவாகும்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டே ஐந்தாண்டுகளுக்குள் ரூ. 4 லட்சம் வரை மிச்சப்படுத்த முடியும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த சிஎன்ஜி வாகனங்கள் மிக அதிக மைலேஜ் தரக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. ஆல்ஃபா டிஎக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் பயணிகள் ஆட்டோ ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 40.2 கிமீ மைலேஜையும், கார்கோ வாகனம் ஒரு கிலோவிற்கு 38.6 கிமீ மைலேஜையும் வழங்கும்.

இந்த மைலேஜ் திறனை வாகனத்தை விரட்டி ஓட்டாமல் இருந்தால் அதிகரித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. மேலே பார்த்த மைலேஜ் விபரம் அராய் அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இரு வாகனத்திலும் ஒரே மாதிரியான மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, 395 செமீ3 வாட்டர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 23.5 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இந்த வாகனத்தை ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. மேலும், பெஸ்ட்-இன்-செக்மெண்ட் மெட்டல் ஷீட்டுகளை பயன்படுத்தியே வாகனத்தை கட்டமைத்திருக்கின்றது.

இந்த மெட்டல் ஷீட்டின் அடர்த்தி 0.90 மிமீ ஆகும். ஆகையால், உறுதித் தன்மை அதிகம் என்பது தெளிவாக தெரிகின்றது. இதன் வாயிலாக அதிக சேமிப்பை மட்டுமின்றி நீண்ட நாட்கள் இந்த வாகனம் உழைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே இந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர் அதிகளவு சேமிப்பையும், லாபத்தையும் அடைவர் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








