மீண்டும் மஹிந்திரா தயாரிப்புமீது அமெரிக்க நிறுவனம் புகார்!.. இந்த அழகான காரை மஹிந்திரா காப்பியடிச்சிருச்சாம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் இந்த அழகிய கார் மாடல் தங்களுடைய வாகனத்தை காப்பியடித்து உருவாக்கியிருப்பதாக பிரபல அமெரிக்க நிறுவனம் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் காரணத்தினால் குறிப்பிட்ட மஹிந்திரா காரின் விற்பனைக்கு நிரந்தர தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் சிலவற்றிலும் அதன் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அமெரிக்க சந்தையில் நமது இந்திய நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கு இந்தியாவில் விற்பனைச் செய்யப்படாத சில கார் மாடல்களைக் கூட மஹிந்திரா விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், ரோக்ஸர் (Mahindra Roxor) எனும் வித்தியாசமான தோற்றம் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் அமெரிக்கர்களுக்காக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பழைய தலைமுறை தார் காரின் ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் இந்த காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனத்தின் விற்பனைக்கே தடை கோரி பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

ஆகையால், இக்காரின் விற்பனைக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கின்றது. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள், ஜீப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ரோக்ஸர் காரின் விற்பனைக்கு நிரந்தர தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன. இதனால், மஹிந்திரா ரோக்ஸர் கார் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

சிகேடி முறையில் இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவின் டெட்ராய்டில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. இவ்வாறே அமெரிக்காவில் ரோக்ஸர் விற்பனைச் செய்யப்படுகின்றது. இதன் பெரும்பாலான தோற்றம் பழைய தலைமுறை தாரை ஒத்தவாறு இருந்தாலும், முன்பக்கம் உள்ளிட்ட சில பகுதிகள் ஜீப் நிறுவனத்தின் ஜீப் ரக வாகனத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே தடை முறையீட்டை அந்நிறுவனம் செய்திருக்கின்றது. இதற்கு முன்னதாகவும் இதேபோன்றதொரு வழக்கை ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (இந்நிறுவனம் ஸ்டெல்லன்டிஸ் எனும் பெயரில் இப்போது இயங்கி வருகிறது) தொடுத்திருந்தது. இதனால், 2020ம் ஆண்டிற்கு பிந்தைய ரோக்ஸரின் விற்பனைக்கு தடை ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் அதன் ரோக்ஸர் காரை புதிய வடிவமைப்பிற்கு மாற்றியது. ஜீப் வாகனத்திடம் இருந்து வித்தியாசமாக தென்பட வேண்டும் என்பதற்காக காரின் ஃபெண்டர்கள், வீல் ஆர்ச்சுகள், வீலில் காணப்படும் பள்ளங்கள், பான்னட் டிசைன், ஹூட் லேட்சுகள் க்ரில் உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டன.

இருப்பினும், தற்போது மீண்டும் காப்பி-ரைட்ஸ் பிரச்னையை மஹிந்திரா சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. அதாவது, புதுப்பித்தல்களை மேற்கொண்ட பிறகும் மஹிந்திரா ரோக்ஸர் ஜீப் நகல் எடுத்திருப்பதைபோல் இருப்பதாக ஸ்டெல்லண்டிஸ் தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஆகையால், மஹிந்திரா ரோக்ஸர் காரின் விற்பனைக்கு தடை ஏற்படலாம் என தெரிகின்றது.

அதேவேலையில், மஹிந்திரா நிறுவனம் தங்களது ரோக்ஸர் கார் ஜீப்பின் எந்தவொரு டிசைனையும் காப்பி செய்யவில்லை என்பதை நிரூபித்தால் இந்த காரை தொடர்ந்து அமெரிக்க சந்தையில் வர்த்தகப் பணியில் ஈடுபடுத்த முடியும். இந்த நிலையில், தங்களுக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்ற மஹிந்திரா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மஹிந்திரா ரோக்ஸர் ஓர் 4X4 தொழில்நுட்பம் கொண்ட ஆஃப்-ரோடு ரக வாகனம் ஆகும். இந்த வாகனத்திற்கு அமெரிக்க சந்தையில் கணிசமான அளவில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கன்றது. இந்தியாவிலேயே இந்த காரின் பெரும்பாலான பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், 2010ம் ஆண்டிற்கு முன்னர் வரை இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இருந்தது.

குறிப்பிட்ட சில காரணங்களினால் அது தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காருக்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்த காரை எதிர்பார்க்கும் நபர்களுக்கு மாற்று வழியில் விருந்தளிக்கும் விதமாக தற்போது புதிய தலைமுறை தார் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த காருக்கு இந்திய சந்தையில் டிமாண்ட் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








