770 கிமீ ரேஞ்ச்... அட்டகாசமான எலெக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
சொகுசு ரகத்தில் புதிய எலெக்ட்ரிக் செடான் கார் மாடலை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இந்தியாவின் முதல் சொகுசு ரக எலெக்ட்ரிக் செடான் கார் மாடலாக வர இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பற்றிய பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு எதிர்பார்த்தைவிட சிறப்பாக அமைந்துள்ளது. சாதாரண ரக எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, சொகுசு ரக கார் சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருந்து வருகிறது.
2020ம் ஆண்டு இறுதியில் சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இக்யூசி என்ற எஸ்யூவி மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த மாடலுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்ததால், பிற சொகுசு கார் நிறுவனங்களும் தங்களது முதல் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கின.

இந்த நிலையில், அடுத்து ஒரு சிறந்த எலெக்ட்ரிக் கார் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதை உறுதி செய்துள்ளது. தற்போது உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் மாடலாக இருந்து வரும் எஸ் க்ளாஸ் காரின் அடிப்படையிலான இக்யூஎஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் செடான் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

இதுவரை இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார்கள் வரிசை கட்டி வரும் நிலையில், அதிக சொகுசான எலெக்ட்ரிக் காரை விரும்பும் பெரும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

இந்த கார் எலெக்ட்ரிக் கார்களுக்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கி புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அளவுக்கு உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இக்யூஎஸ் எலெக்ட்ரிக் சொகுசு கார் பற்றிய மற்றொரு முக்கிய விஷயம், இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படும். இதனால், விலை மிக சரியாக நிர்ணயிக்கப்படும் என்பதால், இப்போதே பெரும் கோடீஸ்வரர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில், முதலில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் லான்ச் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடலை இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் கூடுதல் மதிப்பை வழங்கும் விஷயமாக பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் சொகுசு காரின் EQS 450+ என்ற வேரியண்ட்டில் ஒற்றை மின் மோட்டாருடன் கூடிய ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், மற்றொரு EQS 580 என்ற வேரியண்ட்டில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கிறது. இதில், EQS 450+ வேரியண்ட் 334 எச்பி பவரையும், EQS 580 வேரியண்ட் 523 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். இந்த இரண்டு வேரியண்ட்டுகளில் EQS 450+ மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரின் இரண்டு வேரியண்ட்டுகளிலுமே 107.8kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 770 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்டுகிறது. இதே காரின் அதி செயல்திறன் மிக்க ஏஎம்ஜி பிராண்டு மாடலும் பின்னர் இந்தியாவில் கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில், அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் இந்த புதிய இக்யூஎஸ் எலெக்ட்ரிக் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு நேரடி போட்டி இப்போதைக்கு இருக்காது. தற்போது விற்பனையில் உள்ள சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தும் எஸ்யூவி ரகத்தை சார்ந்தது. ரூ.1 கோடியை ஒட்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








