ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் கார் மாடல்களில் இனி டிசிடி தேர்வு கிடைக்காது.. விலைய வேற ஏத்திட்டாங்க! இதோ முழு விபரம்!
ஹெக்டர் (Hector) மற்றும் ஹெக்டர் ப்ளஸ் (Hector Plus) ஆகிய கார் மாடல்களில் இனி டிசிடி தேர்வு கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், எம்ஜி மோட்டார்ஸ் (MG Motors) நிறுவனம் அதன் கார்களின் விலையையும் ஏற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

எம்ஜி மோட்டார் (MG Motors) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வரும் கார்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. இதுமட்டுமின்றி சில வாகனங்களின் தேர்வுகளையும் நிறுவனம் மாற்றி அமைத்திருக்கின்றது. அதாவது, வரவேற்புக் குன்றி காணப்படும் சில தேர்வுகளை விற்பனையில் இருந்து நீக்கியிருக்கின்றது.

அந்தவகையில், அதன் புகழ்மிக்க கார் மாடலான ஹெக்டர் (Hector)-இல் இருந்து டிசிடி (Dual Clutch Transmission) தேர்வுகளை விற்பனையில் இருந்து நிறுவனம் நீக்கி இருக்கின்றது. இந்த தேர்வை மற்றுமொரு பிரபல கார் மாடலான ஹெக்டர் ப்ளஸ் (Hector Plus)-லும் இருந்து எம்ஜி நீக்கி இருக்கின்றது. ஆகையால், இரண்டு கார் மாடல்களிலும் டிசிடி தேர்வு விற்பனைக்குக் கிடைக்காது நிலை உருவாகி இருக்கின்றது.

டிசிடி என்பது உடனடி மற்றும் மிக விரைவான கியர் ஷிஃப்டிங் வசதியைக் கொண்டது ஆகும். இரு தனி தனி கிளட்ச் பிளேட்டுகளில் இது இயங்குகின்றது. இந்த வசதிக் கொண்ட தேர்வுகளையே தற்போது எம்ஜி நிறுவனம் விற்பனையில் இருந்து நீக்கியிருக்கின்றது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கத்தில் இருந்து டிசிடி வசதிக் கொண்ட மாடல்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

எம்ஜி நிறுவனம் மிக சமீபத்தில் சிவிடி தேர்வு கொண்ட வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகம் அரங்கேறி சில வாரங்களே ஆகின்ற நிலையில் தற்போது டிசிடி தேர்வுகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இந்த டிசிடி தேர்வானது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு மாற்றாக தற்போது விற்பனையில் இருக்கும் சிவிடி தேர்வு 2021ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டிவிடி கியர்பாக்ஸைக் காட்டிலும் மிக சிறப்பாக செயல்படும் வசதியைக் கொண்டிருக்கின்றது. மிக ஸ்மூத்தான பிக்-அப், சிறந்த கியர் ரேஷியோ ஆகியவற்றை இது வழங்குகின்றது.

டிசிடி தேர்வின் வெளியேற்றத் தொடர்ந்து எம்ஜி நிறுவனம் மற்றுமொரு ஷாக்களிக்கும் விஷயத்தையும் செய்திருக்கின்றது. நிறுவனம், அதன் கார்களின் விலையில் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. அதாவது, விலையேற்றத்தை செய்துள்ளது. ரூ. 55 ஆயிரம் வரை விலை உயர்வை நிறுவனம் செய்திருக்கின்றது. இது ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் செய்யப்பட்ட விலை உயர்வாகும்.

நிறுவனத்தின் பிரீமியம் தர கார் மாடலான குளோஸ்டரின் விலையில் ரூ. 1.30 லட்சம் வரை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் விலைகளை உயர்த்தி அறிவித்திருக்கின்றன. அவற்றின் வரிசையில் எம்ஜி நிறுவனம் இணைந்திருக்கின்றது.

தொடர்ச்சியாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, செமி கன்டக்டர்களின் பற்றாக்குறை வாகன உலகை கடுமையாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவும் அனைத்து வாகனங்களின் விலையேற்றத்திற்கு ஓர் காரணமாக இருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் மின் வாகன விற்பனையில் கோளோச்சவும் திட்டமிட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர அது திட்டமிட்டிருக்கின்றது. தற்போது நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே விலைக் குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்து வருகின்றது.

நிறுவனம் ரூ. 11.99 லட்சம் என்ற விலையில் டிகோர் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்தியாவில் இதைவிட குறைவான விலையில் எந்தவொரு எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு போட்டியளிக்கும் வகையிலேயே எம்ஜி நிறுவனம் மிக விரைவில் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








