ஆசியாவின் டெட்ராய்டுக்கு வாருங்கள்... ஆதாரங்களுடன் டெஸ்லாவிற்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு எலான் மஸ்க்கை தலைமை செயல் அதிகாரியாக கொண்ட அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா உலகின் பல்வேறு நாடுகளில் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு எப்போது வரும்? என்ற ஆவல் வாடிக்கையாளர்கள் பலரிடம் காணப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலை தளங்களில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எலான் மஸ்க்கும் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால் பதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்.

இந்த சூழலில் சமூக வலை தள பயனர் ஒருவர், டெஸ்லாவின் இந்திய வருகை தொடர்பான தகவல்கள் ஏதேனும் உள்ளதா? என எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எலான் மஸ்க்கும் பதில் அளித்தார். அவர் தெரிவித்த பதிலில், ''இந்திய அரசுடன் இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்'' என கூறியிருந்தார்.

இந்திய அரசின் வரி விதிப்பு முறைகள் தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திற்கு அதிருப்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை தாமதமாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் டெஸ்லா நிறுவனத்தின் தங்கள் வசம் ஈர்ப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் போட்டி போட்டு வருகின்றன.

டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை தங்களது மாநிலத்தில் அமைக்குமாறு தெலங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை பஞ்சாப் மாநிலத்தில் அமைக்குமாறும் கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான நவ்ஜோத் சிங் சித்து இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தை தங்களது மாநிலத்திற்கு அழைக்கும் அரசுகளின் பட்டியலில் தமிழகமும் இணைந்துள்ளது. ஆம், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழகத்தில் இருந்து டெஸ்லா நிறுவனத்திற்கு கோரிக்கை சென்றுள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கோரிக்கையை சமூக வலை தளம் வாயிலாக விடுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலை தளங்களில் அவர் கூறியிருப்பதாவது: ஹாய் எலான் மஸ்க். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மொத்த திட்டமிடப்பட்ட முதலீட்டில் தமிழ்நாடு 34 சதவீத பங்கை வகித்து வருகிறது.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தலைநகருக்கு வரவேற்கிறோம். அத்துடன் உலகின் முதல் ஒன்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது அழைப்பை ஏற்று டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அழைப்பின் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை பெறுவதில் தமிழக அரசும் ஆர்வம் காட்டுகிறது என்பது தெளிவாகி விட்டது. ஆசியாவின் டெட்ராய்டு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் சிறப்பை சென்னை பெற்றுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்.

ஹூண்டாய், ரெனால்ட்-நிஸான், ராயல் என்பீல்டு என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலை கூட தமிழகத்தில்தான் அமைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் பல்வேறு வாகன நிறுவனங்களும், வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டெஸ்லா நிறுவனமும் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








