மீண்டும் உயிர் பெறுகிறது டாடா நானோ... மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த போறாங்க!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனி ராஜாவாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). தற்போதைய நிலையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Nexon EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tigor EV) ஆகிய எலெக்ட்ரிக் தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த வரிசையில் டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tiago EV) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பன்ச் எலெக்ட்ரிக் கார் (Punch EV), அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Altroz EV) என பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இதுதவிர (Curvv EV) மற்றும் (Avinya EV) எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்துள்ளது. இந்த கான்செப்ட் மாடல்களும், இறுதி தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன. இந்த சூழலில், மக்களின் கார் (People's Car) என பெயர் எடுத்த நானோ (Tata Nano) காருக்கும் மீண்டும் உயிர் கொடுப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டாடா நானோ கார், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைவான விலை என்பதால், டாடா நானோ கார் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இது ரத்தன் டாடாவின் (Ratan Tata) கனவு கார் ஆகும். இந்திய மக்கள் அனைவரிடமும் சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டும் என்ற உயரிய லட்சத்தியத்துடன், டாடா நானோ காரை அவர் பார்த்து பார்த்து உருவாக்கினார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக டாடா நானோ கார் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக டாடா நானோ காரின் உற்பத்தி, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நிறுத்தி கொள்ளப்பட்டது. இந்த சூழலில்தான், டாடா நானோ கார் புதிய அவதாரம் எடுக்கவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் (Nano EV) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினுக்கு சப்போர்ட் செய்வதற்காக நானோ காரின் தற்போதைய பிளாட்பார்ம்மை மேம்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காரின் சஸ்பென்ஸன் மற்றும் டயர்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது இறுதி வடிவம் பெற்றால், மேலும் சில விஷயங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சென்னை மறைமலைநகர் பகுதியில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே கையப்படுத்தி விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கான ஒப்பந்தம் வெகு சமீபத்தில்தான் கையெழுத்தானது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டாடா நானோ என்பது வெறும் கார் அல்ல. அது ரத்தன் டாடாவின் கனவு திட்டம் ஆகும். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது கனவு திட்டம் தோல்வியில் முடிந்தது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம்தான். எனினும் டாடா நானோ கார் எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அது ரத்தன் டாடாவின் கனவிற்கு மீண்டும் உயிர் கொடுப்பதை போல் அமையும் என்பது உறுதி. அதேபோல் குறைவான விலையில் அறிமுகம் செய்யலாம் என்பதால், நடுத்தர வர்க்க மக்களின் எலெக்ட்ரிக் கார் கனவையும் இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் நிறைவேற்ற முடியும்.


Click it and Unblock the Notifications








