இவ்ளோ சூப்பரான கார் காவல்துறைக்கா! புதிய ஆணையரகங்களுக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா கார்கள்... இதோட விலை எவ்வளவு?
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகங்களுக்கு புதிய மற்றும் அதி-நவீன வசதிகள் கொண்ட மஹிந்திரா (Mahindra) கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் சிறப்பு வசதிகள் மற்றும் விலை பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழக மக்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள். சென்னை காவல்துறை தற்போதைய திமுக அரசினால் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி என மூன்று காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இப்பிரிவை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கான புதிய ஆயுதங்கள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் வாக்கி டக்கிகள் போன்ற கருவிகள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இப்புதிய காவல் ஆணையகங்களுக்கான ஆணையர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டனர். ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரே புதிய ஆணையரகங்களின் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே அந்தந்த காவல் ஆணையரகங்களுக்கான புதிய ரோந்து வாகனங்கள் தற்போது வாங்கப்பட்டிருக்கின்றன.

புதிதாக வாங்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்கள் தற்போது தமிழக மக்களின் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. பொதுவாக காவல் துறை வாகனம் என்றால் வெள்ளை, நீலம் மற்றும் முழு சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும். ஆனால், இந்த யுக்தி புதிய ஆணையரகங்களுக்கான வாகனங்களில் மாற்றப்பட்டிருக்கின்றது.

புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் காவல் ரோந்து வாகனங்கள்அடர் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இத்துடன், மஞ்சள் நிற கோடுகளும் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, வெள்ளை மற்றும் கருப்பு நிற பார்டர்கள் கொண்ட போலீஸ் எனும் வார்த்தை மிக பெரிய அளவில் பக்கவாட்டு பகுதிகளில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், பேட்ரோல் வாகனம் என்பதை தெரியப்படுத்தும் வார்த்தையும் காரின் பக்கவாட்டு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் சிறப்பு தகவலாக அவசர கால அழைப்பு எண்களும் காரின் பின் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களே இந்த வாகனத்தின் கொள்முதலை பெரும் பேசு பொருளாக மாற்றியிருக்கின்றது. தற்போது வாங்கப்பட்டிருப்பது அதிகள் சிறப்பு வசதிகள் கொண்ட மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பொலிரோ நியோ (Bolero Neo) கார் மாடல் ஆகும்.

இந்த கார் மாடலே புதிய காவல் ஆணையரகங்களுக்கு தற்போது வாங்கப்பட்டிருக்கின்றன. காவலர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த வாகனம் பல மாடங்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டிக்கர்கள் மட்டுமின்றி சைரன் மற்றும் அவசர கால பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இது மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இது ரூ. 8.48 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

டியூவி300 எஸ்யூவி காருக்கு மாற்றாக இப்புதிய பொலிரோ நியோ நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை டியூவி300 காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் என்றும் கூறலாம். மிரட்டலான தோற்றம், அலாய் வீல்கள், ஸ்பாய்லர், டெயில்கேட் கேட் ஆகிய புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

சந்தையில் இக்கார் பழுப்பு, மெஜஸ்டிக் சில்வர், ஹைவே சிவப்பு, பவள வெள்ளி, பியர்ல் வெள்ளை மற்றும் நபோலி கருப்பு ஆகிய நிற நிறத்தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவை நியோ என்4, என்8 மற்றும் என்10 ஆகும்.

பிளாஸ்டிக் கிளாடிங், 3.5 இன்ச் அளவுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ள்ஸ்ட்டர், வினைல் இருக்கை, நகரக்கூடிய வசதி கொண்ட மூன்றாம் இருக்கை வரிசை, ஈக்கோ மோட் உடன் கூடிய ஏசி, பவர் ஸ்டியரிங், பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் பொலிரோ நியோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளுடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வரும் காரையே புதிய காவல் ஆணையரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிலேயே காவல்துறையினர் ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரு புதிய ஆணையரகங்களுக்கும் சேர்த்து 10 ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








