சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
விரைபில் பிஎஸ் 6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வு விதிகள் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய விதிகளுக்கு இணங்க தயார் செய்யப்பட்டு இருக்கும் தனது அனைத்து தயாரிப்புகளையும் ரெனால்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மலிவு விலையில் வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ரெனால்ட் (Renault)-ம் ஒன்று. இந்த நிறுவனமே தனது அனைத்து தயாரிப்பையும் புதிய மாசு உமிழ்வு உட்பட்டதாக தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விரைவில் இந்தியாவில் பிஎஸ்-6 பேஸ் 2 (BS6 Phase II) அமல்படுத்தப்பட உள்ளது. பிஎஸ்6-ஐக் காட்டிலும் கடுமையான மாசு உமிழ்வு விதிகளைக் கொண்டதாக இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

காற்று மாசை குறைக்கும் முயற்சி
இந்தியாவில் தற்போது வாகனங்களினால் அதிகரித்துக் காணப்படும் காற்று மாசை குறைக்கும் பொருட்டு இந்திய அரசு இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றது. ஆகையால், இதற்கு இணங்க வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் களமிறங்கியிருக்கின்றனர். அவ்வாறு பிஎஸ் 6 பேஸ் 2 விதிகளுக்கு உட்பட்டு தயாரித்த கார் மாடல்களையே ரெனால்ட் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களாக ட்ரைபர், கைகர் மற்றும் க்விட் ஆகியவை உள்ளன.
புதிய வேரியண்ட் அறிமுகம்
இவற்றையே பிஎஸ் 6 பேஸ் 2 விதிகளுக்கு உட்பட்ட வாகனமாக ரெனால்ட் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த கார் மாடல்கள் பிஎஸ் 6 பேஸ் 2 தரத்திற்கு ஏற்றதாக மட்டுமே அப்கிரேட் செய்யப்படவில்லை, சற்று பாதுகாப்பானதாகவும் அந்த கார் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி புதிதாக க்விட் ஹேட்ச்பேக் கார் மாடலில் புதிதாக ஆர்எக்ஸ்இ எனும் புதிய வேரியண்டையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

சுயமாக மாசை கண்டறியும் கருவி
புதிய மாசு உமிழ்வு விதியின்கீழ் செல்ஃப்-டயக்னாஸ்டிக் டிவைஸ் (சுயமாக மாசை கண்டறியும் கருவி) ஒன்று அனைத்து மாடல்களிலும் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி பொருத்தப்பட்ட அந்த வாகனம் எந்த அளவு அதிக மாசை வெளிப்படுத்துகின்றது என்பதைக் காட்டிக் கொடுக்கும். ஆமாங்க, வாகனத்தில் இருந்து வெளி வரும் காற்று மாசின் அளவைக் கண்டறியும் கருவியே இது ஆகும். இதை அனைத்து வாகனங்களிலும் வழங்க வேண்டும் என்பதையே புதிய மாசு உமிழ்வு விதி தற்போது கட்டாயமாக்கி இருக்கின்றது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்
இதனுடன் கேடலடிக் கன்வெர்டர் மற்றும் ஆக்ஸிஜன் சென்சார்களும் இடம் பெற்றிருக்கும். இத்துடன், சில பாதுகாப்பு அம்சங்களை ரெனால்ட் அதன் தயாரிப்புகளில் வழங்க ஆரம்பித்திருக்கின்றது. அனைத்து கார் மாடல்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி அம்சம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களே வழங்கப்பட்டு உள்ளன. இந்த அம்சங்களால் ரெனால்ட் கார்கள் அனைத்தும் அதிக பாதுகாப்பை வழங்கும் தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளன.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் கைகர் மற்றும் ட்ரைபர் ஆகிய இரண்டு கார் மாடல்களும் அதிக பாதுகாப்பானவை என்கிற பெருமைக்கு உரியவையாக உள்ளன. இரு கார் மாடல்களும் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு 4 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் பாதுகாப்பு திறனை தற்போது ரெனால்ட் மேலும் பலமடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இதன் விளைவாக கூடுதல் வாடிக்கையாளர்களை இந்த கார் மாடல்கள் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய வேரியண்டின் விலை விபரம்
ரெனால்ட் நிறுவனம் அதன் க்விட் கார் மடாலில் புதிதாக ஆர்எக்ஸ்இ வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக கூறி இருந்தோம். இந்த புதிய வேரியண்டிற்கு ரூ. 4.69 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகின்றது. இந்த வேரியண்டில் இன்டிகேட்டருடன் அடங்கிய ஓஆர்விஎம், ஆடியோ மற்றும் செல்போனை கன்ட்ரோல் செய்யக் கூடிய வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கும்.
புக்கிங் தொடங்கியாச்சு
இதற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் அதன் பிஎஸ்6 ஃபேஸ் 2 விதிக்கு தயாரான கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ரெனால்ட் அதன் கார்களைக் களமிறக்கி இருக்கின்றது. இதுபோல் அடுத்தடுத்த வாகன உற்பத்தியாளர்களும் புதிய விதிக்கு உட்பட்டு தயார் செய்யப்பட்ட தங்களின் கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு களமிறக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








