இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
இந்தியாவில் ஒரு காலத்தில் கார் என்றால் அது அம்பாசிடரும், பத்மினி கார்கள் மட்டுமே என பலர் நினைத்திருந்தனர். ஏனெனில் அந்த சமயத்தில், வேறு சில கார்களும் விற்பனையில் இருந்தன என்றாலும், நாடு முழுவதும் இந்த இரு கார்கள் மட்டுமே பரவலாக பரவி இருந்தன. அதேபோன்று, அடுத்தடுத்த காலக்கட்டங்களில் வேறு சில கார்கள் பிரபலமாகின. அவ்வாறு சந்தையில் பிரபலமாகி, தற்சமயம் விற்பனையில் இல்லாத கார்களை இனி இந்த செய்தியில் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.
ஹிந்துஸ்தான் அம்பாசிடர்
அம்பாசிடர், இந்திய சாலைகளின் அரசன் என்று சொன்னால் அது மிகையாகாது. 1956இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 58 வருடங்களாக உற்பத்தி செய்யப்பட்டு வந்த அம்பாசிடர் கார்களை ஆரம்ப காலக்கட்டத்தில் விஐபி-கள் மட்டுமே பயன்படுத்த துவங்கினர். அதன்பின் இதன் சவுகரியமும், பயண அனுபவமும் பலருக்கு பிடித்த போக பல்வேறு மாநிலங்களில் அரசாங்க வாகனங்களாகவும், டாக்ஸிகளாகவும் கூட அம்பாசிடர் கார்கள் இருந்துள்ளன. இவ்வாறு மக்கள் மனதில் தற்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்த கார் மீண்டும் எலக்ட்ரிக் வெர்சனில் வரவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஹிந்துஸ்தான் காண்டெஸ்ஸா
சவுகரியமான பயணம் கிடைத்தால் போதும் என நினைத்தவர்கள் அம்பாசிடர் பக்கம் செல்ல, அம்பாசிடரை காட்டிலும் ஆற்றல்மிக்க காரை விரும்புபவர்களுக்காக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 1984இல் அறிமுகப்படுத்திய மாடல் தான் காண்டெஸ்ஸா ஆகும். அதன்பின் 2002ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்டுவந்த இந்த காரின் விலை கடைசியாக ரூ.4.84 லட்சம் - ரூ.5.42 லட்சம் வரையில் இருந்தன. காண்டெஸ்ஸா பெயருக்கான உரிமைகோரி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சமீபத்தில் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா சியார்ரா
பயணிகள் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸின் ஆரம்ப காலக்கட்ட முயற்சிகளுள் ஒன்று சியார்ரா ஆகும். டாடா டெல்கோலைன் என்ற பிக்-அப் ட்ரக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சியார்ரா 3 கதவுகளுடன் அல்பைன் ஜன்னல்களை பின்பக்கத்தில் கொண்டிருந்தது பலரை வெகுவாக கவர்ந்தது. 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் சியார்ரா போன்றதான வடிவில் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை நிறுத்திய டாடா நிறுவனம் சமீபத்திய 2023 ஆட்டோ எக்ஸ்போவில் எரிபொருள் என்ஜின் உடன் சியார்ரா கான்செப்ட்டை காட்சிக்கு நிறுத்தியது.

மாருதி ஜிப்ஸி
தற்சமயம் இந்தியாவின் நம்பர்.01 கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகி அடையாள மாடல்களுள் ஒன்று ஜிப்ஸி எனலாம். 2018இல் விற்பனை நிறுத்தப்பட்ட ஜிப்ஸியை மீண்டும் எப்போது கொண்டுவருவீர்கள் என பலரும் மாருதி சுஸுகியை கேட்டு கொண்டிருந்த நிலையில், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் ஜிம்னி ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கான முன்பதிவுகளை மாருதி நிறுவனம் துவங்கியது. இதனால் ஜிப்ஸி மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மாருதி 800
இந்திய மிடில்-கிளாஸ் மக்களின் கார். அம்பாசிடர் கூட ஆரம்பத்தில் வசதி படைத்தவர்களாலேயே வாங்கப்பட்டது. ஆனால் மாருதி 800 ஆரம்பம் முதலே, ஒரு காரை சொந்தமாக்கி விட மாட்டோமா என ஏங்கி கொண்டிருந்தவர்களின் கைகளுக்கு சென்ற பட்ஜெட் விலை கார். 1983இல் இருந்து 2014 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி 800 கார்கள் தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும், அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாருதி ஆல்டோ ஹேட்ச்பேக் கார்கள் தற்போதும் விற்பனையில் உள்ளன.

சுஸுகி ஜென்
கார் ரேசர்கள் மூலமாக இந்தியாவில் பிரபலமாகிய ஹேட்ச்பேக் கார், சுஸுகி ஜென். ஜி10பி என்ஜின் உடன் உற்பத்தி செய்யப்பட்ட இதனை பலர் பந்தயங்களுக்காக 100 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மாடிஃபை செய்து பயன்படுத்தினர். ஜென் கார்களின் சிறப்பம்சமே, அவற்றின் ஹேண்ட்லிங் தான். கோ-கார்ட் வாகனங்களை போன்று ஹேண்ட்லிங்கை கொண்ட இந்த ஜப்பானிய சுஸுகி காரில் த்ரோட்டல் ரெஸ்பான்ஸ் ஆனது மிகவும் விரைவாக கிடைத்தது.
மாருதி ஆம்னி
மாருதி 800 -இன் அதே 800சிசி என்ஜின் உடன் மாருதி தயாரித்த 2வது வாகனம் ஆம்னி ஆகும். ஆனால் ஆரம்பத்தில் இதனை மாருதி சுஸுகி வேன் என்று மட்டுமே அழைத்தனர். அதன்பின் ஆம்னி என பெயர் சூட்டப்பட்ட இந்த வாகனத்தை ஒரு சமயத்தில் டாக்ஸியில் இருந்து ஆம்புலன்ஸ் வரையில் என அனைத்து இடங்களிலும் பரவலாக பார்க்க முடிந்தது. இதனால் சினிமா திரைப்படங்களிலும் அதிகளவில் பார்க்க முடிந்த ஆம்னி வாகனங்கள் பொருட்களை ஏற்றி செல்லவும் பயன்படுத்தப்பட்டன.


Click it and Unblock the Notifications









