டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு போட்டியாக, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக ரீகால் (Recall) செய்யப்பட்டு கொண்டே இருப்பது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எவ்வளவு கார்கள்?
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியில் இருந்து நவம்பர் 15ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட 4,026 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் செய்துள்ளது. மேற்கண்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களின் ரியர் சீட்பெல்ட் அசெம்ப்ளியில் பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அதனை ஆய்வு செய்து, பிரச்னையை சரி செய்வதற்காக டொயோட்டா நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், டொயோட்டா நிறுவனம் அதனை இலவசமாகவே சரி செய்து தந்து விடும். சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப்கள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளன. கூடுதல் விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், டொயோட்டா டீலர்ஷிப்களை தொடர்பு கொள்ள முடியும். முன்னதாக மாருதி சுஸுகி நிறுவனமும் இதே பிரச்னைக்காக க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார்களை ரீகால் செய்துள்ளது.

ரெண்டும் ஒரே கார்தாங்க!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய இரண்டும் ஒரே கார்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த 2 கார்களிலும் ஒரே பிளாட்பார்ம் மற்றும் பாகங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதால், கார்களை பரிமாறி கொள்கின்றன. இதற்கிடையே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் ரீகால் செய்யப்பட்டிருப்பது இது 3வது முறையாகும்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏர்பேக் அசெம்ப்ளி கண்ட்ரோலர் பாகத்தில் பிரச்னை இருக்கலாம் என்பதால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டொயோட்டா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இதை தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்ட 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (2023 Toyota Innova Crysta) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது.
எப்போது வரும்?
அனேகமாக புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரை தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட மிகவும் குறைவான விலையில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ஜ் போன்ற ஒரு சில விஷயங்கள் தவிர, மாருதி சுஸுகி எர்டிகா காருக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்காது. அதாவது டிசைன், இன்ஜின் மற்றும் வசதிகள் ஆகியவை எல்லாம் ஒன்று போலவே இருக்கும். மாருதி சுஸுகி எர்டிகா தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகும். எனவே டொயோட்டா பிராண்டிலும் இந்த கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








