கடந்த நிதியாண்டில் இந்திய மார்க்கெட்டை அதிர வைத்த ஹோண்டா... காரணம் இதுதான்...
ஹோண்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மார்ச் 31ம் தேதியான நேற்று முன் தினத்துடன் 2018-19 நிதியாண்டு முடிவடைந்து புதிய 2019-20 நிதியாண்டு பிறந்துள்ளது. எனவே முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்திற்கான மற்றும் கடந்த 2018-19 நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வரிசையாக வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Ltd-HCIL) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் உள்நாட்டில் 1,83,787 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில் 1,70,026 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் 2018-19ம் நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 2018-19ம் நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் 4,794 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில் 17,202 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில் வெறும் 13,574 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 38 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது (ஆம், 38 கார்கள்தான்).

இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனரான ராஜேஸ் கோயல் கூறுகையில், ''2018-19ம் நிதியாண்டை 8 சதவீத வளர்ச்சியுடன் நாங்கள் நிறைவு செய்துள்ளோம். எங்களின் வளர்ச்சிக்கு ஆல் நியூ அமேஸ் கார் ஒரு முக்கியமான காரணம். உலக அளவில் அதிகம் விற்பனையாகும் எங்களின் பெஸ்ட் செல்லர்களான சிவிக் மற்றும் சிஆர்-வி கார்களை லான்ச் செய்திருப்பதன் மூலம் பிரீமியம் தயாரிப்புகளை உள்ளடக்கிய ஹோண்டாவின் லைன் அப் வலுவடைந்துள்ளது'' என்றார்.

புத்தம் புதிய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மார்க்கெட் திணறி கொண்டிருக்கும் சூழலில், சிவிக் காருக்கு புக்கிங் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








