பிடதி ஆலையில் உற்பத்தி பாதிப்பு... டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் தள்ளி போகலாம்
பிடதி ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகம் தள்ளி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து ஏப்ரல் இறுதி வரை கார் விற்பனை அடியோடு முடங்கியது. அதன்பின் மே மாதம் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து, கார் உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டாலும், விற்பனை சிறப்பாக இல்லை.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் காரணமாக புதிய கார்கள் வாங்கும் முடிவை பலர் தள்ளி போட்டனர். எனினும் மே மாதத்திற்கு பிறகு கார் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கார் விற்பனை வெகு சிறப்பாக இருந்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதற்கு பண்டிகை காலமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு முன்னணி கார் நிறுவனங்கள் பலவும் விற்பனையை அதிகரித்து கொண்டுள்ளன. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு இதனை சரியான சந்தர்ப்பமாக கார் நிறுவனங்கள் பார்க்கின்றன.

ஆனால் இந்த வாய்ப்பை கொஞ்சம் தவற விடும் சூழலில் டொயோட்டா சிக்கி கொண்டுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகே உள்ள பிடதியில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM - Toyota Kirloskar Motor) நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 432 ஏக்கர்கள் பரப்பளவில் பிடதி தொழிற்சாலை பரந்து விரிந்துள்ளது.

இங்கு 6,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்யும் திறனை இந்த தொழிற்சாலை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களான இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் ஆகியவை இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் பிடதி தொழிற்சாலையில் பணியாற்றும் 1,200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து பிடதி தொழிற்சாலையை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டொயோட்டா நிறுவனம் மூடியது. இதன் காரணமாக அங்கு தற்போது உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை டெலிவரி செய்வது பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் டொயோட்டா நிறுவனம் இதனை மறுத்துள்ளது. அத்துடன் இந்த வேலை நிறுத்தத்தின் தாக்கம் வாடிக்கையாளர்களை பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் தொடரும்பட்சத்தில், இந்த பண்டிகை காலத்தில் சிறப்பான விற்பனையை டொயோட்டா இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகத்தை டொயோட்டா நிறுவனம் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில்தான், இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகம் தள்ளி போகவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அதனை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








