விற்பனை செய்த கார்களை திரும்பி அழைக்கும் Ford... தாமாக முன் வந்து அதிரடி காட்டும் நிறுவனம்!
ஃபோர்டு (Ford) நிறுவனம் ஏற்கனவே விற்பனைச் செய்த கார்களை திரும்பி எடுத்துமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபோர்டு (Ford) நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு இந்தியர்கள் பலரை, குறிப்பாக, நிறுவனத்தின் தயாரிப்பைப் பெரிதும் விரும்புவோர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் வெளியேற்றத்தால் அது விற்பனைக்கு வழங்கி வந்த ஈகோஸ்போர்ட், ஃபிகோ மற்றும் அஸ்பையர் போன்ற கார் மாடல்களின் விற்பனையும் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இது மேலும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியர்களுக்கு அமைந்தது. அதிலும் மிகக் குறிப்பாக ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் வெளியேற்றம் பல மடங்கு சோகத்தை இந்திய வாகன ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தியது என்று கூட கூறலாம். மிகவும் அதிக பாதுகாப்பு திறன் மற்றும் அம்சங்களைக் கொண்ட வாகனமாக இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

ஆகையால், இக்காருக்கென தனி ரசிக பட்டாளம் தற்போது நிலவி வருகின்றது. இருப்பினும், போதிய விற்பனை எண்ணிக்கையைப் பெற இந்த கார் மாடலும் தவறிவிட்டது. இதுபோன்ற அவலநிலை காரணமாகவே நிறுவனம் இந்தியாவை வெளியேறியது. இந்த நிலையில், தங்கள் நிறுவனம் தற்போது இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் அறிவிப்பை ஃபோர்டு வெளியிட்டிருக்கின்றது.

ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறினாலும், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளைச் செய்வதில் இருந்து பின் வாங்க மாட்டோம் என அறிவித்திருந்தது. சர்வீஸ் மற்றும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான பாகங்களை வழங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என தெரிவித்திருந்தது. இந்த செயல்பாட்டை நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் தகவல் அமைந்துள்ளது.

அதாவது, நிறுவனம் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் ஏற்பட்ட தயாரிப்பு கோளாறை சரி செய்யும் விதமாக ஓர் அழைப்பை விடுத்துள்ளது. ஃபோர்டு தாமாக முன் வந்து இந்த அழைப்பை விடுத்துள்ளது. டீசல் துகள் வடிகட்டி (Diesel Particulate Filter)இல் கோளாறு இருப்பதை நிறுவனம் கண்டறிந்திருக்கின்றன. இதனை சரி செய்யும் பொருட்டே நிறுவனம் தற்போது ஈகோஸ்போர்ட் கார் பயனர்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது.

விஐஎன்-இன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. தங்களின் ஃபோர்டு காரில் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கும் என சந்தேகித்தால் அருகில் இருக்கும் சர்வீஸ் மையங்களை நாடலாம். பிரச்னை இருப்பின் அது சரிபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈகோஸ்போர்ட் டீசல் எஞ்ஜின் கார் பயன்பாட்டாளர்கள் எஞ்ஜினின் ஆர்பிஎம்மில் பிரச்னை இருப்பதாக குற்றம்சாட்டினர். ரெவ்-இல் ஏற்றம், இறக்கம் அதிகம் இருப்பதை அவர் உணர்ந்தனர். முறையான கம்பியூசன் இல்லாததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. இதற்கு டீசல் துகள் வடிகட்டியில் ஏற்பட்டிருக்கும் கோளாறும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதுமாதிரியான புகார் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து கிடைத்ததை அடுத்தே தற்போது கோளாறுள்ள வாகனங்களை திரும்பி அழைக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. சிக்கலைத் தீர்க்க, சேவை மையங்கள் பாதிக்கப்பட்ட கார்களின் பவர்ட்ரெயின் கன்ட்ரோல் மாட்யூல் (Powertrain Control Module) மென்பொருளைப் புதுப்பிக்க இருக்கின்றது.

மேலும் தேவைப்பட்டால், வெளியேற்ற அமைப்பின் உமிழ்வை குறைக்கக் கூடிய கூறுகளையும் மாற்ற இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பணி நிறைவடைவதற்கு அரை நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், இதற்கு தயாராக வரும்படி சேவை மையங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் 1.5 லிட்டர் டர்போசார்ஜட், இன்லைன் 4 மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைத்தது. இந்த எஞ்ஜின் 100 பிஎஸ் மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு இன்லைன்-4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைத்தது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் மற்றும் 149 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழக்கமானதாகவும், 6 ஸ்பீடு ஏடி ஆப்ஷனல் தேர்வாக பெட்ரோல் வெர்ஷனுக்கு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








