20 வருஷம் ஆன கார்கள் எல்லாம் மலையேறப்போகுது... பழைய வாகன அழிப்புக்காக புதிய கொள்கை... பட்ஜெட்டில் அறிவிப்பு!
மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களை அழிப்பதற்கான புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த கொள்கை குறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பழைய வாகனங்களை குறிப்பிட்டு ஆண்டுகளுக்கு பிறகு அழிப்பதற்கான புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றன. இதன்மூலமாக, பழைய வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துக்களையும், மாசு உமிழ்வு பிரச்னைகளையும் தவிர்க்க வழி ஏற்படும். அத்துடன், புதிய வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும்.

இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பழைய வாகன அழிப்பு கொள்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 15 ஆண்டுகள் கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் கடந்த கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் மாசு உமிழ்வு தரம் உள்ளிட்டவற்றை பரிசோதிப்பதற்காக தகுதிச் சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் தானியங்கி தகுதிச் சோதனை மையங்களுக்கு அனுப்பப்படும்.

அதேபோன்று, வாகன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பழைய வாகனங்களை அழிப்பதற்கு கொடுத்து புதிய வாகனங்களை வாங்குவதற்கும் ஊக்கத் திட்டமும் கொண்டு வரப்பட உள்ளது. ஆனால், இதுபற்றி தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில்," பழைய வாகன அழிப்புத் திட்டத்தின் மூலமாக, அதிக எரிபொருள் செலவையும், மாசு உமிழ்வையும் ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியும். அதேநேரத்தில், அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு கொண்ட புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், வாகன எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்கும் பயன்படும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன்மூலமாக, ரூ.43,000 கோடி அளவுக்கு வாகன உற்பத்தித் துறைக்கு வர்த்தகம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்கள் வாங்கும் உரிமையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








