செம சூப்பர்... பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் இப்படிப்பட்ட நன்மைகள் எல்லாம் கிடைக்குமா?
பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய மற்றும் சாலையில் இயக்குவதற்கு தகுதியற்ற வாகனங்களை அழிக்கும் திட்டம், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தின் மூலம், வாகன உதிரி பாகங்களின் விலை 40 சதவீதம் வரை குறையும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, இந்த தகவல்களை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் வாகன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் குறித்து அவர் கூறுகையில், ''15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்தவையாக இருக்காது.

அத்துடன் அவற்றை பராமரிப்பதற்கான செலவும் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்கு பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் உதவி செய்யும்'' என்றார். பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தின் கீழ் என்னென்ன சலுகைகள் வழங்கப்படவுள்ளன? என்பது வெகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருவதற்கு பழைய வாகனங்களும் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை நாம் பார்க்கலாம். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும். இதன் மூலம் புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பதால், பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு, ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் மற்றொரு முக்கியமான நன்மையும் இருக்கிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் அது. ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் போன்ற போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத பழைய வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் கட்டுக்குள் வருவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக, பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








