பிப்.15ல் பயணிகள் சேவைக்கு வருகிறது டிரெயின்-18 எக்ஸ்பிரஸ் ரயில்!
வரும் 15ந் தேதி காலை 10 மணியளவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவின் அதிவேக ரயில் சேவையை வரும் 15ந் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்படி, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், டிரெயின் -18 என்ற பெயரிலான அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக டிரெயின்-18 ரயில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது. சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயில் 180 கிமீ வேகம் வரை தொட்டு புதிய சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்த ரயிலை பயணிகள் சேவைக்கு கொண்டு வருவதற்கான ரயில்வே பாதுகாப்பு வாரியம் அனுமதி வழங்கி இருக்கிறது.

இதனையடுத்து, வரும் 15ந் தேதி காலை 10 மணியளவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார்.

இந்தியாவின் அதிவேக ரயில் மாடலாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிரெயின்-18 உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிற ரயில்களை போன்று தனி எஞ்சின் இல்லாமல், ரயிலை இயக்குவதற்கான மின் மோட்டார்கள் பயணிகள் பெட்டிகளின் கீழாகவே பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதனால், தனி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களை விட அதிக மின்சார சிக்கனத்தை வழங்கும். அதேபோன்று, அதிவிரைவான பிக்கப்பையும், சீக்கிரமாகவே நிறுத்த முடியும் என்பது இந்த ரயிலின் பிற முக்கிய அம்சங்கள்.

இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இரு புறத்திலும் ஓட்டுனருக்கான கட்டுப்பாட்டு அறை இடம்பெற்றிருக்கிறது. எனவே, ரயில் தடத்தை தெளிவாக பார்த்து ஓட்டும் வகையில் மிக விசாலமான முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடி இடம்பெற்று இருப்பது கூடுதல் பாதுகாப்பான அம்சம்.

அதேபோன்று, பெட்டிகளிலும் விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் வெளிப்புறத்தை வேடிக்கை பார்ப்பதற்கும் தொந்தரவு இல்லாத வகையில் இருக்கும்.

இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது, மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இரண்டாவது டிரெயின்-18 ரயிலில் விசேஷ கண்ணாடி பயன்படுத்தப்பட இருக்கிறது.

கல்வீச்சு தாக்குதலில் கூட தாக்குப்பிடிக்கும் வகையிலான விசேஷ கண்ணாடி மற்றும் ஃப்ரேம்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதனால், கல்வீச்சின்போது பயணிகளுக்கு காயம் ஏற்படாத வகையில் இருக்கும்.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், பொழுதுபோக்கு வசதிகள், மின்னணு தகவல் பலகைகள், அடுத்து வரும் ரயில் நிலையங்கள் குறித்த குரல் வழி அறிவிப்புகள், சிசிடிவி கேமரா மற்றும் பயோ கழிவறைகள் என பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது இயக்கப்பட்டு வரும் சதாப்தி பகல்நேர விரைவு ரயில்களுக்கு மாற்றாக புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. சென்னையில் தயாரிக்கப்பட்டாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த ரயில் தென்னிந்தியாவில் சேவைக்கு வராது என்பது ஏமாற்றமான விஷயம்.

டெல்லி - வாரணாசி இடையில் இயக்கப்படும் ரயில்கள் 13 முதல் 17 மணிநேர பயண நேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கின்றன. ஆனால், டிரெயின்-18 ரயில் வெறும் 8 மணிநேரத்தில் இரு நகரங்களையும் இணைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications