பைக்கரின் டுவிட்டிற்கு சாமர்த்தியமாக பதிலளித்த போலீஸ்... டுவிட்டரில் வைரலாகும் பதிவு...!
டுவிட்டரில் தெலங்கானா மாநில போலீஸ் செய்த டுவிட் பல மில்லியன் லைக்கையும், ஷேரையும் குவித்து வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நெட்டிசன்களுக்கு இணையாக, நாட்டில் உள்ள பல அரசு துறைகளும் இணையத்தில் வேகம் எடுத்து வருகின்றன. அந்தவகையில், அண்மைக் காலங்களாக தெலங்கான மாநில போலீஸார் செய்துவரும் செயல்கள் அனைத்தும் பேசு பொருளாக மாறி வருகின்றது. அதிலும், அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸாரின் இணையதளம் கையாளும் விதமே மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றது.

அந்தவகையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த புகைப்படங்களையும், அதன் அபராத நிலுவைத் தொகைக் குறித்த தகவலையும் பதிவிட்டு, வாகனத்தின் உரிமையாளர் உடனடியாக அபராத நிலுவையை செலத்தும் சூழலை உருவாக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்த தகவலை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் போக்குவரத்து போலீஸார் செய்த டுவிட் ஒன்று, பல மில்லியன் லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகின்றன.
இளைஞர் ஒருவர், அவரது டுவிட்டர் பக்கத்தில், தான் தெலங்கானா போலீஸாரால் தவறான அபராதத்தைப் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-செலாணுடன், போக்குவரத்து வீதிமீறலில் ஈடுபட்டதாக அனுப்பப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "சர் நாங்க இருவர் மட்டுமே பைக்கில் சென்றுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், போலீஸார் மூவர் செல்வதாக கூறி இ-செலாணை அனுப்பி வைத்துள்ளார்கள். கொஞ்சம் நெருக்கமா உற்று பாருங்க நடுவில் பேக்தான் இருக்கின்றது" என அதில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு அதிகளவில் வைரலானதை அடுத்து, தெலங்கான போக்குவரத்துத்துறை போலீஸாரின் கண்களிலும் சிக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "சார், உங்களுடைய விண்ணப்பத்தை நாங்கள் ஏற்கின்றோம். போக்குவரத்து விதிமீறலாக மூவர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றதை மாற்றிவிடுகின்றோம்" என பதிவிட்டிருந்தனர்.

ஆம்... அந்த இளைஞர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அதற்காகவே அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் இருவருக்கும் நடுவே பேக் ஒன்று வைக்கப்பட்டிருந்ததால், போலீஸாரை தவறான விதிமீறலுக்கு இ-செலாண் போட வைத்துள்ளது. இதனால், குழப்பமடைந்த போலீஸார் ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு பதிலாக, மூன்று நபர் பயணத்திற்கான இ-செலாண் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேசமயம், போலீஸாரின் இந்த டிரிக்கியான பதிவு நெட்டிசன்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. மேலும், இந்த கையாளும்முறை பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகின்றது.

போலீஸின் இந்த பதிவால், முன்னதாக டுவிட் செய்த அந்த இளைஞர் தற்போது விழிப்பிதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த மொஹமத் முபீன் என்பது தெரியவந்துள்ளது. இவர், கடந்த 13ம் தேதி அவருடைய நண்பருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இணையத்தில் அதிகளவில் வைரலான ப்ரே ஃபார் நேசமணியைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, நேசமணி ஹெல்மெட் அணிந்திருந்தால், இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என பதிவிட்டிருந்தனர். போலீஸாரின் இந்த இணையம் கையாளும் முறை பலரிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதேசமயம், நெட்டிசன்களுக்கு இணையாக அவர்கள் செயல்படும்முறை சற்று வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








