ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு திடீர் சிக்கல்... ஆர்டிஓ அதிகாரிகளின் இந்த அதிரடிக்கு காரணம் இதுதான்...
ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் (Nashik) மாவட்டத்தில், பல்லாயிரக்கணக்கான ஆட்டோ ரிக்ஸாக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான ஆட்டோ ரிக்ஸாக்கள் மிகவும் பழையவை. குறிப்பாக 20 வயதை கடந்த ஆட்டோ ரிக்ஸாக்கள் பலவும் தற்போது நாசிக் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. இத்தகைய ஆட்டோ ரிக்ஸாக்களால் சுற்றுச்சூழல் மாசுபாடுகிறது. அத்துடன் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 ஆண்டுகளை கடந்த ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு தடை விதிக்க ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

ஆட்டோ ரிக்ஸாக்கள் மட்டுமல்லாது 20 ஆண்டுகளுக்கும் மேலான டாக்ஸிகளுக்கும் தடை விதிப்பது என அப்போது முடிவானது. இதன்பின் 20 வயதை கடந்த ஆட்டோ ரிக்ஸா மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்தக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் அவற்றின் பதிவை ரத்தும் செய்யும்படியும் வலியுறுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும் எனவும் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளின் இந்த உத்தரவை பெரும்பாலான ஆட்டோ ரிக்ஸா உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் 20 ஆண்டுகளை கடந்த ஆட்டோ ரிக்ஸாக்கள் இன்னமும் நாசிக் மாவட்ட சாலைகளில் இயங்கி வருகின்றன. அதுவும் அதிக அளவிலான ஆட்டோ ரிக்ஸாக்கள் இயங்கி கொண்டுள்ளன'' என்றனர். எனவே 20 ஆண்டுகளை கடந்த ஆட்டோ ரிக்ஸாக்களை களையெடுப்பதற்காக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் இன்று முதல் (ஏப்ரல் 1) அதிரடி சோதனை நடத்தவுள்ளனர். இந்த சோதனையில் 20 வயதை கடந்த ஆட்டோ ரிக்ஸாக்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக ஆட்டோ ரிக்ஸா உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பர்மிட் ஹோல்டர் மற்றும் டிரைவரின் விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஆட்டோ ரிக்ஸாக்களில் ஒட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்களை வழங்குவதற்காக ஏஜென்சி ஒன்றை நியமனம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏஜென்சியிடம் இருந்து ஸ்டிக்கரை பெற்று தங்கள் ஆட்டோ ரிக்ஸாக்களில் கட்டாயமாக ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆட்டோ ரிக்ஸாக்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உதவும். இதற்காக வரும் மே மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆட்டோ ரிக்ஸாக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

இதனை உறுதி செய்து கொள்வதற்காக வரும் ஜூன் 1ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தப்படவுள்ளது. ஸ்டிக்கர் உத்தரவை பின்பற்றாத ஆட்டோ ரிக்ஸா உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது அப்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குற்ற பின்னணியை முழுமையாக ஆராயாமல் டிரைவர்களுக்கு ஆட்டோ ரிக்ஸாக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








