கை நழுவி போன 300 மில்லியன் டாலர் முதலீடு... இந்த முதலீடு வேறு நாட்டிற்கு நடைய கட்ட காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவிற்கு வர இருந்த மாபெரும் முதலீடு தற்போது இந்தியாவின் கையை விட்டு நழுவி போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான காரணத்தை முழுவதும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

கிரேட் வால் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் வாகன உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இது ஓர் சீன நிறுவனம் ஆகும். இந்த ஒற்றை காரணத்தினாலேயே இந்திய அரசு இதன் முதலீட்டிற்கான அங்கீகாரத்தை கிடப்பில் போட்டது.

இதன் விளைவாக தனது இந்திய முதலீட்டின் ஒரு பகுதியை வேறொரு நாட்டில் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஓராண்டிற்கும் மேல் இந்தியாவின் அங்கீகாரத்திற்காக எதிர்பார்த்து வந்தநிலையில் இந்த முடிவை நிறுவனம் எட்டியிருக்கின்றது. பிரேசில் நாட்டிலேயே தனது முதலீட்டை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 300 மில்லியன் டாலர்கள் அளவில் அங்கு முதலீடு செய்யப்பட இருக்கின்றது. மேலும், தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக பிரேசில் நாட்டில் உள்ள டைம்லர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையைக் கையகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களுடன் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதில் சில வீரர்கள் வீர மரணமடைந்தனர், ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொதிப்பலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவிற்கு எதிரான முழக்கங்கள் நாடு முழுவதும் எழும்ப தொடங்கியது.

குறிப்பாக, சீன தயாரிப்புகளுக்கு எதிராக வலுவான முழக்கங்கள் எழும்பின. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் செல்போன் செயலிகள் சிலவற்றிற்கு அதிரடியாக தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் முற்று புள்ளி வைக்க அரசுகள் தொடங்கின.

இதனடிப்படையில், மஹாராஷ்டிரா மாநில அரசு தங்களது மாநிலத்தில் அமைய இருந்த கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஆப்பு வைத்தது. அங்கீகாரம் கிடைக்க இருந்த மிக ஒரு சில நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால் கிரேட் வால் மோட்டார்ஸின் இந்திய வருகை கனவு கனவாகவே மாறியது.

தற்போது வரை நிறுவனம் பல முயற்சிகளை எடுத்தும் நிறுவனத்தால் இந்தியாவில் நுழயை முடியாத சூழ்நிலையே தென்படுகின்றது. எஸ்யூவி கார் தயாரிப்பில் உலகளவில் முதன்மையான நிறுவனமாக கிரேட் வால் மோட்டார்ஸ் தென்படுகின்றது. இந்த நிறுவனம் பல முன்னணி கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

குறிப்பாக, மிக மிக மலிவு விலையில் ஓர் எலெக்ட்ரிக் காரை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்த அந்த எலெக்ட்ரிக் காரை நிறுவனம் 2020 வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது எலெக்ட்ரிக் காரின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்தது.

இத்தகைய காரின் வருகையும் ஒன்றியம் மற்றும் மஹராஷ்டிரா அரசின் அதிரடியால் தற்போது நிறைவேறாத ஒன்றாக மாறியிருக்கின்றது. இருப்பினும், பிற நிறுவனங்களின் உதவியுடன் தன்னுடைய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் கிரேட் வால் மோட்டார் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்காக சில வெளிநாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுடன் அது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மிக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே வெகு நாட்களாக கால தாமதாகி வந்ததன் காரணத்தினால், இந்தியாவில் முதலீடு செய்ய ஒதுக்கீடு செய்திருந்த தொகையில் இருந்து சிறிது பங்கை பிரேசில் நாட்டில் முதலீடு செய்ய கிரேட் வால் மோட்டார் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கிரேட் வால் மோட்டார் அறிமுகம் செய்ய இருந்த ஆர்1 எலெக்ட்ரிக் கார் ரூ. 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை இந்தியாவில் ரூ. 13.99 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், நாட்டின் மிக மலிவு விலையிலான எலெக்ட்ரிக் காராக ஆர்1 எதிர்பார்க்கப்பட்டது.

Source:carandbike
இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் காரை மணிக்கு 100 கிமீ வேகம், 40 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜாகும் திறன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இந்தியாவில் களமிறக்க கிரேட் வால் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான தகவல்களின் காரணத்தினாலேயே இந்தியாவில் இக்கார் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்ற நிலை தற்போது இந்தியாவில் உருவாகியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








