இனி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற அனைவரும் தயங்காமல் முன்வருவார்கள்... ஒன்றிய அரசின் சூப்பர் திட்டம்!
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களை ஊக்குவிப்பதற்காக அதிரடியான திட்டம் ஒன்றை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இதன்படி விபத்தில் சிக்கியவர்களுக்கு 'கோல்டன் ஹவர்' எனப்படும் நேரத்தில், மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற உதவிகளை செய்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை மற்றும் போக்குவரத்து துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், மோட்டார் வாகனம் காரணமாக நடைபெறும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோல்டன் ஹவரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நல்ல மனிதர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதற்கு பலரும் முன்வருவதில்லை.

காவல் நிலையம், நீதிமன்றம் என அலைய வேண்டியதிருக்கும் என்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக உடனடியாக சிகிச்சை கிடைக்க வேண்டியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்ள கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் கூட பலர் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய தயங்குகின்றனர். எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பணம் மட்டுமின்றி, அவர்களை பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படும். எனவே இனி சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பரிசு தொகை மற்றும் சான்றிதழ் தவிர, தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் பெற்றவர்களில் மிகவும் தகுதியான 10 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








