இந்தியாவின் முதல் ஸ்மார்ட் விரைவு புறவழிச்சாலையின் சிறப்பம்சங்கள்!!
கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிநவீன கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட 2 புதிய விரைவு சாலைகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிநவீன கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட 2 புதிய விரைவு சாலைகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார். வெளிநாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கட்டமைப்புடன் இந்த சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளின் விபரம் மற்றும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் விரிவாக் காணலாம்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் டெல்லியின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து டெல்லிக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கடந்து செல்லும் வாகனங்களால் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

இதற்காக, டெல்லிக்குள் வரும் வாகனங்களை குறைக்கும் முயற்சியாக 2006ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் புறவழிச்சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியின் மேற்கு மற்றும் கிழக்கு எக்ஸ்பிரஸ் புறவழிச்சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தலா 135 கிமீ தூரத்திற்கு இந்த விரைவு புறவழிச்சாலைகள் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெல்லி மேற்கு எக்ஸ்பிரஸ் புறவழிச்சாலை குன்ட்லி-மானேசர்-பல்வால் இடையே அமைக்கப்படுகிறது. இதில், மானேசர்-பல்வால் இடையிலான விரைவு சாலை கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில், மானசர்- குன்ட்லி இடையிலான சாலை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லி கிழக்கு விரைவு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இந்த சாலையை நாட்டிற்கு அர்பணித்த மோடி திறந்த எஸ்யூவி காரில் 9 கிமீ தூரம் பயணித்தார்.

இந்த விரைவு புறவழிச் சாலை 135 கிமீ தூரத்திற்கு இந்த ஸ்மார்ட் விரைவு சாலையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் சாலை என்பதற்கு வெளிநாடுகளுக்கு இணையாக பல்வேறு விசஷே தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.
இந்த சாலையில் வேக வரம்பை தாண்டி அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை விசேஷ கேமராக்கள் மூலமாக கண்டறிந்து தானியங்கி முறையில் அபாரதம் விதிக்கும் கட்டமைப்பும் கொண்டுள்ளது. மேலும், பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் செலுத்தினால் போதுமானது. விபத்து உள்ளிட்ட போக்குவரத்துக்கு இடையூறான விஷயங்களை உடனடியாக கண்டறியும் வசதியும் உள்ளது.

இந்த சாலையில் ஒவ்வொரு 500 மீட்டருக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாலையில் சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக, 4 மெகாவாட் திறன் கொண்ட 8 சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விரைவுச் சாலையில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சொட்டு நீர்ப் பாசன அமைப்பும் இடம்பெற்றுள்ளது. சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்குகள், மழைநீர் சேகரிப்பு வசதி, மரக்கன்றுகள் நடவு என இந்த சாலை இந்தியாவின் முதல் பசுமை நெடுஞ்சாலையாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், வாகனங்களால் அதிக காற்று மாசுபாடுடைய நகரமாக மாறி இருக்கும் டெல்லியில், இந்த புதிய சாலையின் மூலமாக வாகனங்களால் ஏற்படும் மாசு அளவு 27 சதவீதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டிலேயே முதல்முறையாக மிதிவண்டிக்கான தடம் கொண்ட விரைவு சாலையும் இதுதான். சாலையின் இருபுறத்திலும் மிதிவண்டி செல்வதற்கான 2.5 மீட்டர் அகலத்திற்கான பிரத்யேக தடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. பாதசாரிகளுக்கான தடமும் உள்ளது.

குன்ட்லி அருகே துவங்கும் இந்த கிழக்கு விரைவு புறவழிச்சாலையானது சோன்பேட், பாக்பத், காசியாபாத், நொய்டா, பரீதாபாத் மற்றும் பல்வால் ஆகிய நகரங்கள் ஊடாக செல்கிறது. இதன்மூலமாக, இந்த நகரங்களிலிருந்து எளிதாக பிற இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பும் வாகன ஓட்டிகளுக்கு கிட்டி இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கிழக்கு புறவழிச்சாலையில் 4 பெரிய பாலங்கள்், 46 சிறிய பாலங்கள், 3 மேம்பாலங்கள், 7 சாலை சந்திப்புகள், 221 சுரங்கப் பாதைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகனங்கள் இந்த சாலையில் ஏறுவதற்கும், வெளியேறுவதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சாலை ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சாலையின் இருபுறத்திலும் 36 தேசிய நினைவுச் சின்னங்களும், நீருற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் இருந்து இமாச்சலப் பிரதேசம் செல்பவர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் செல்பவர்களும் இனி டெல்லிக்குள் வராமலேயே இந்த சாலையை பயன்படுத்தி செல்ல முடியும்.

டெல்லி - மீரட் விரைவுச் சாலை
டெல்லி கிழக்கு விரைவு புறவழிச்சாலை மட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லி- மீரட் இடையிலான அதிவிரைவு சாலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். டெல்லி- மீரட் இடையில் 82 கிமீ தூரத்திற்கு இந்த விரைவு சாலை அமைக்கப்படுகிறது.
டெல்லி- மீரட் விரைவு சாலையின் முதல் 27.74 கிமீ தூரத்திற்கு 14 தடங்கள் கொண்ட சாலையாக அமைக்கப்படுகிறது. மீதமுள்ள தூரம் 6 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த சாலை ரூ.7,500 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல்முறையாக தொங்கும் தோட்ட அமைப்பு, சொட்டு நீர்பாசன கட்டமைப்புடன் இந்த சாலை அமைக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து காஸியாபாத்தில் உள்ள தாஸ்னா வரை மிதிவண்டி தடத்துடன் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இந்த சாலையில் 31 சிக்னல்கள் இருக்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்பட்டது. இந்த புதிய சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது சிக்னல் இல்லாமல் டெல்லி- மீரட் நகரை அடைய முடியும் மிக விரைவாக அடைய முடியும்.
இந்த புதிய விரைவுச் சாலையின் மூலமாக டெல்லி- மீரட் இடையிலான பயண நேரம் இரண்டரை மணிநேரத்திலிருந்து 45 நிமிடங்களாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் நாட்டின் இதரப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் விரைவுச் சாலைகளிலும் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications