19 லட்ச ரூபாய் கார், 190 நாட்கள் கூட ஓடவில்லை... கோபத்தில் கியா செல்டோஸ் வாடிக்கையாளர் செய்த செயல்..
வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்டோஸ் எஸ்யூவி காரை பொது சாலையில் கழுதையின் உருவ படங்களுடன் இயக்கியது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை அதிர்ச்சியுற செய்துள்ளது. ஏன் இந்த ஊர்வலம் என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மத்தியில் தான் செல்டோஸ் எஸ்யூவி மாடல் மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது. அதன்பின் இந்நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கடந்த பிப்ரவரி மாதத்திலும், சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி அடுத்த சில மாதங்களிலும் அறிமுகமாகவுள்ளது.

இவ்வாறு இந்நிறுவனம் தனது சந்தையை இந்தியாவில் வேகமாக விரிவுப்படுத்தி வருவதற்கு நிறுவனத்தின் முதல் அறிமுகமான செல்டோஸிற்கு கிடைத்துவரும் ஏகோபித்த வரவேற்பு தான் முக்கிய காரணம். இதனால் தான் கியா நிறுவனம் காலடி வைத்து ஒரு வருடத்தில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக மாறியுள்ளது.

இருப்பினும் இவ்வாறான புதிய தயாரிப்புகள் சில வாடிக்கையாளர்களை கவருவதில்லை. இதற்கு உதாரணமாக, கடந்த ஆண்டு இறுதியில் கூட ஒருவர் தனது எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இயக்க வைத்தார். அந்த சமயத்தில் இந்த விஷயத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனமே நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டது.

அதேபோன்று தற்போது சில வரிகள் அடங்கிய வாக்கியங்களுடன் கழுதை புகைப்படங்களை காரை சுற்றிலும் கட்டி வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்டோஸை சாலையில் இயக்கி வந்தது தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்த பேனர்களில், '19 லட்ச ரூபாய் கார், 190 நாட்கள் கூட ஓடவில்லை' என்றும், ‘குடும்பத்தின் பாதுகாப்பை ஆபத்தில் வைக்க வேண்டாம்' என்றும் குறிப்பிட்டுள்ள அவர், செல்டோஸில் பயணம் செய்வதை விட கழுதை சவாரி சிறந்தது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த வாடிக்கையாளரின் பெயர் தீபக் அகர்வால். சத்தீஸ்கர் ராய்காட்டை சேர்ந்த இவர் செல்டோஸின் எச்டிஎக்ஸ்+ டீசல் வேரியண்ட்டை ரூ.19 லட்சத்தில் 23 அக்டோபர் 2019 அன்று வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் மற்ற கார்களை போன்று நன்றாகவே இயங்கி கொண்டிருந்த இந்த கார் இரவு முழுவதும் நிறுத்திவிட்டு பிறகு காலையில் எடுக்கும்போது இரைச்சலை கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்த பிரச்சனையில் தீபக் முதலில் அதிக கவனம் செலுத்தவில்லை. இதனால் காரை அதிகம் ஓட்டவில்லை என்று கூறும் அவர், இந்த 10 மாதங்களில் 9000கிமீ மட்டுமே ஓட்டியுள்ளார். இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால், தனது காருடன் ஒரு நீண்ட பயணத்தை ஏற்பாடு செய்தவருக்கு அதிர்ச்சியாக 80கிமீ இயக்கத்திற்கு பிறகு கார் திடீரென நின்றுள்ளது.

என்ன பிரச்சனை என்பதை அறிய பொனெட்டை தீபக் திறந்துள்ளார். அப்போது என்ஜினில் இருந்து கசிந்துவந்த எண்ணெய் மற்ற பகுதிகளுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார் மிகவும் சூடாக இருந்துள்ளது.

உடனே நிறுவனத்தின் சாலையோர உதவியை தீபக் நாடியுள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் காரை சேவை மையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள இயக்கவியலாளர்களாலும் காரின் பிரச்சனையை சரிசெய்ய முடியவில்லை.

இதனால் தனது காரை மாற்றி கொடுக்கும்படி தீபக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு டீலர்ஷிப்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நேரடியாக நிறுவனத்தை தொடர்பு கொள்ளவே அங்கிருந்து தீபக்கை மகிழ்ச்சி படுத்தும் வகையில் எந்த பதிலும் வரவில்லை போலும்.
அதனால் தான் இவ்வாறு அதிரடியாக கழுதை படத்துடன் தனது கார் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இது தயாரிப்பு நிறுவனம் மீதான வாடிக்கையாளர்களின் பார்வையை மாற்றும் என்பதால், கியா மோட்டார்ஸ் விரைவில் தீபக் அகர்வாலை தொடர்பு கொண்டு அவரது பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறோம்.
Image Courtesy: Deepak Agarwal


Click it and Unblock the Notifications








