பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான சுரங்க வழி சாலை! சிறப்பு தகவல்கள் மற்றும் படங்கள்!
உலகின் மிகவும் நீளமான சுரங்க வழி பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் மணாலியும் ஒன்று. ஹனிமூன் ஜோடிகளுக்கு மிகவும் பிடித்தமான குளிர் பிரதேசமான இது, அட்வென்சர் பயண பிரியர்களுக்கும் விருப்பமான பகுதியாக இருக்கின்றது. குறிப்பாக, அதிக சவால்கள் நிறைந்த கரடு-முரடான இதன் சாலைகளில் பயணிப்பதற்காகவே, பலர் இந்தியாவின் கடைக்கோடியில் இருந்தும் இருசக்கர வாகனத்திலிருந்தும்கூட பயணிக்கின்றனர்.

அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த பகுதியாக மணாலியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் இருக்கின்றன. இம்மாதிரியான இடத்திலேயே நாட்டின் மிகவும் நீளமான சுரங்வழிப் பாதையான 'அடல் சுரங்கம்' அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக கட்டுமானம் செய்யப்பட்டு வந்த சுரங்கப்பாதை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (03 அக்டோபர்) திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த சுரங்கம் மக்களின் பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் நமது நாட்டின் மிக நீளமான சுரங்கவழிப்பாதை மட்டுமல்ல, இது உலகின் மிக நீளமான சுரங்க வழிப் பாதையும் கூட. ஆம், தற்போது உலகில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து சுரங்க வழிப் பாதைகளைக் காட்டிலும் அடல் சுரங்கப்பாதை மிகவும் நீளமானதாகும்.

இதனையே இந்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக கட்டி வந்தது. இமாச்சலத்தின் மணாலியில் தொடங்கி, லடாக்கின் லே பகுதி வரை இப்பாதை நீள்கின்றது. இதன் நீளம் ஒட்டுமொத்தமாக 8.8 கிமீ ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த பாதை, 10.5 மீட்டர் அகலத்தைக் கொண்டிருக்கின்றது.

இது இரு வழி பாதை ஆகும். மேலும், ஒரே டனல் வழியாகவே இரு வழி பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வழியாக பயணித்தால் முந்தைய பாதையைக் காட்டிலும் சுமார் 46 கிமீ வரை சேமிக்க முடியும். மேலும், இதன் வழியாக பயணித்தால் அதிக பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.

மேலும், எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த நேரத்தில் இலக்கைச் சென்று சேரவும் முடியும். இதுபோன்ற நோக்கங்களுக்காவே உலகின் மிக நீளமான அடல் சுரங்கம் கட்டப்பட்டிருக்கின்றது. என்னதான் இருந்தாலும் மணாலி-லடாக் வழித்தடத்தில் நிறைந்திருக்கும் ஆபத்து மற்றும் சவால்கள் நிறைந்த பாதையில் பயணிப்பதற்காகவே ஒரு சில ஆர்வலர்கள் அங்கு சென்று வருகின்றனர்.

இருப்பினும், தற்போதைய நீண்ட நெடிய சுரங்க வழி பாதை அவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையிலே அமைந்திருக்கின்றது. ஆம், தொடர்ச்சியாக ஒரே நீளமான, சீரான பாதையில் செல்வது அவர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் என யூகிக்கப்படுகின்றது.

குறிப்பாக, பனி படாரத, கதகதப்பான மற்றும் ஆபத்தே இல்லாத இந்த சுரங்க வழி பாதை சாகச பயண பிரியர்களுக்கு கூடுதல் சிறப்பானதாக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சுரங்க வழிப் பாதைக்கு முன்னால் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக 'அடல்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் முழுப் பெயர் 'அடல் சுரங்கம், ரோஹ்தாங்' ஆகும்.

இந்த சுரங்கப்பாதையில் பாதுகாப்பு வசதிகளாக சிசிடிவி கேமிரா ஒவ்வொரு 60 மீட்டர்களுக்கும் இடையிலும், அவசர வெளியேறும் வழியும் ஒவ்வொரு 500 மீட்டர்களுக்கும் இடையேயும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், அனைத்து தட்வெப்ப நிலைகளையும் தாங்கும் இச்சுரங்க வழிப்பாதைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி தீ விபத்துகளைத் தடுக்கும் விதமாக தீயணைப்பான் கருவிகள், அடர் இருட்டிலும் பிரகாசமான ஒளியை வழங்கக்கூடிய மின் விளக்குள் உள்ளிட்டவையும் இந்த சுரங்கப்பாதையில் நிறுவப்பட்டிருக்கின்றன. அவை கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல்வேறு பாதுகாப்பு விஷயங்கள் அடல் சுரங்கப்பாதையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலும், 10.5 மீட்டர் அளவில் இருக்கும் இந்த சுரங்கத்தில் இரு பக்கத்திலும் பாதசாரிகளுக்கான நடைமேடை அமைக்கப்பட்டிருக்கின்றது. அவை 1 மீட்டர் அளவுடையதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுரங்க வழிப் பாதையே பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், "இது 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட ஒரு சின்னம் ஆகும். உள்ளூர் வாசிகளுக்கு பயணத்தை இந்த சுரங்கப்பாதை சுலபமாக்க உதவும். இரு மாநிலங்களை இணைக்கவும் இது உதவும்" என அதில் கூறினார்.

பத்து ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த சுரங்க வழிப்பாதை, சுமார் 12,250 மெட்ரிக் டன் இரும்புகளாலும், 1,69, 426 மெட்ரிக் டன் சிமெண்டாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேலும், 1,01,336 மெட்ரிக் டன் கான்கிரீட்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இவைமட்டுமின்றி, 5,05,264 மெட்ரிக் டன் மணல் மற்றும் கற்கள் இதன் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரியன் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுரழங்க வழிப்பாதை வழியாக நாள் ஒன்றிற்கு 3,000 கார்கள், 1,500 டிரக்குகள் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, அதிக லோடுகளை ஏற்றி வரும் லாரிகள் கூட இதில் மிக சுலபமாக பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப 5 மீட்டர் ஓவர்ஹெட் கிளியரன்ஸ் இதில் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








