ரொம்ப தாகம்... டிராக்டரை நிறுத்தி தண்ணீர் குடித்த யானை... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!
டிராக்டரை நிறுத்தி யானை தண்ணீர் குடிக்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியையும், இதுகுறித்த தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

யானைகள் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவை. யானைகளிடம் காணப்படும் பிரச்னைகளை தீர்க்கும் திறன்களும், புரிந்து கொள்ளக்கூடிய சக்தியும் நமக்கு வியப்பை ஏற்படுத்த கூடியவை. இவற்றை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அனைவரும் ரசிக்க கூடிய வகையில் இந்த காணொளி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹம்பியில் இந்த காணொளி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யானை ஒன்று தனது தாகத்தை தீர்த்து கொள்வதற்காக, டிராக்டரை நிறுத்தி அதன் பின்னால் வைக்கப்பட்டிருந்த டேங்கரில் இருந்து தண்ணீர் பருகியதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. முதலில் யானை டிராக்டரை நோக்கி வருவதை பார்த்ததும், அதன் ஓட்டுனர் குழப்பமும், பதற்றமும் அடைந்ததை போல் தெரிகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் யானை மிகவும் சாதுவாக நடந்து கொண்டது. தன்னுடைய தாகத்தை தணித்து கொள்வதற்காக, தண்ணீர் டேங்கரின் மூடியை திறக்கும்படி, யானை அழகாக சிக்னல் செய்துள்ளது. இதனை புரிந்து கொண்டவுடன் டிராக்டரில் இருந்த நபர், மூடியை திறந்து விட்டார். தண்ணீரை குடித்து முடித்தவுடன், யானை அமைதியாக அந்த இடத்தை கடந்து விட்டது.

தங்களுடைய தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக, யானைகள் வாகனங்களை மறிப்பது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் பேருந்தை நிறுத்தி அதன் உள்ளே இருந்த வாழை பழங்களை யானை எடுத்து சாப்பிட்டது உள்பட இதுபோல் உலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக வனப்பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அங்கே யானைகள் ஆக்ரோஷமாக இருக்ககூடும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக நடந்து கொள்வது அவசியம். வனப்பகுதிகளில் யானைகளை பார்த்தால், வாகன ஓட்டிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக ஒரு சில தகவல்களை வாகன ஓட்டிகள் இந்த சமயத்தில் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
சில சமயங்களில் யானைகள் சாலையை மறித்து நிற்கும். அவை அங்கிருந்து செல்ல நீண்ட நேரம் ஆகலாம். அப்படிப்பட்ட சமயங்களில் முன்னேறி செல்வதை காட்டிலும் காத்திருப்பதுதான் சிறந்தது. காத்திருக்கும் நேரத்தில் இயற்கை காட்சிகளையும், யானைகளின் செயல்பாடுகளையும் அமைதியாக ரசிக்கலாம். காரை விட்டு கீழே இறங்காமல் இதை செய்வது நல்லது.

சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக வனப்பகுதிக்கு செல்பவர்களை காட்டிலும், பேருந்து ஓட்டுனர்களுக்கு யானைகளை எதிர்கொண்ட அனுபவம் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் யானை கூட்டம் வழி விடுவதற்காக மணிக்கணக்கில் கூட அவர்கள் காத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

இன்ஜினை அணைத்து விடுவதுடன், பேருந்துக்கு உள்ளே இருக்கும் பயணிகளை சப்தம் எழுப்ப வேண்டாம் என அவர்கள் கேட்டு கொள்வார்கள். இதையே நீங்களும் கடைபிடிக்கலாம். அத்துடன் யானைகளுக்கும், உங்கள் வாகனத்திற்கும் இடையே பாதுகாப்பான தொலைவு இருக்குமாறு பார்த்து கொள்வதும் சிறப்பான விஷயம்.

அதேபோல் எக்காரணத்தை கொண்டும் ஹாரனை அடித்து விடாதீர்கள். நீங்கள் இதை செய்தால், யானைகள் எரிச்சல் அடைவதற்கோ அல்லது கோவப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகம். இன்ஜினை அணைப்பதுடன், விளக்குகளையும் அணைத்து விடுங்கள். இன்ஜின் சப்தமும், விளக்குகளின் ஒளியும் யானைகளின் கவனம் உங்கள் மீது திரும்பி விடுவதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








