விமான ரகசியம்... நடுவானில் பைலட்கள் எரிபொருளை வெளியே கொட்டுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே
விமானங்களின் பைலட்கள் நடுவானில் ஏன் ஏரிபொருளை வெளியே கொட்டுகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்கள் மற்றும் பைலட்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் வாசகர்களின் பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், 'ஃப்யூயல் டம்ப்பிங்' (Fuel Dumping) பற்றிய விரிவான தகவல்களை இன்று உங்களுக்கு வழங்குகிறோம்.

அவசர சூழ்நிலைகளில் விமானத்தின் எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையைதான் 'ஃப்யூயல் டம்ப்பிங்' என்கின்றனர். அதாவது விமானத்தில் இருந்து எரிபொருள் வெளியே கொட்டப்படும். ஒரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் எரிபொருள் வெளியே கொட்டப்படும்.

மேலும் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது வேறு ஒரு விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்கேயாவதோ அவசரமாக தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் பைலட்கள் எரிபொருளை வெளியே கொட்டுவார்கள். விமானத்தின் எடையை குறைப்பதற்காக நடுவானிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விமானங்களுக்கு அதிகபட்ச லேண்டிங் எடை என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான விமானங்கள் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச லேண்டிங் எடையை காட்டிலும் அதிக எடையுடன்தான் ஒரு விமான நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. பயணத்தின்போது குறிப்பிட்ட அளவு எரிபொருள் எரிக்கப்பட்டு விடும் என்பதால், தரையிறங்கும்போது விமானத்தின் எடை குறைந்து விடும்.

அதாவது விமானத்தின் ஒட்டுமொத்த எடை, அதிகபட்ச லேண்டிங் எடைக்கு உள்ளாக வந்து விடும். விமானம் எந்த பிரச்னையும் இல்லாமல் சாதாரணமாக பயணம் செய்யும்போது மட்டும்தான் இவ்வாறு நடக்கும். ஆனால் அனைத்து சமயங்களிலும் விமானங்கள் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் பறக்கும் என கூறி விட முடியாது.

சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம். அல்லது பயணிகள் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படலாம். இதுபோன்ற சமயங்களில் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு பைலட்கள் தள்ளப்படுவார்கள். அப்போது அதிகபட்ச லேண்டிங் எடைக்கு உள்ளாக வரும் வகையில் எரிபொருள் தீர்ந்திருக்காது.

இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் விமானத்தின் அதிகப்படியான எடையை குறைப்பதற்கு எரிபொருளை வெளியே கொட்டுவதுதான் எளிமையான வழி. அவசர சூழ்நிலைகளில் பைலட்கள் ஏன் 'ஃப்யூயல் டம்ப்பிங்' செய்கின்றனர்? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். ஆனால் அவசர சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக எரிபொருளை வெளியே கொட்டிதான் ஆக வேண்டும் என்பதில்லை.

விமானத்தை 'எமர்ஜென்ஸி லேண்டிங்' செய்ய நேரிட்டால், பைலட்களுக்கு மொத்தம் மூன்று தேர்வுகள் உள்ளன. அதிகபட்ச லேண்டிங் எடைக்கு உள்ளாக வரும்படி எரிபொருளை எரிப்பதற்கு முடிந்த வரை வானிலேயே பறக்கலாம். இல்லாவிட்டால் அதிக எடையுடன் இருந்தாலும் பரவாயில்லை என விமானத்தை உடனடியாக தரையிறக்கலாம். அல்லது எரிபொருளை வெளியே கொட்டலாம்.

சூழ்நிலையை பொறுத்து இதில் பொருத்தமான செயல்முறையை பைலட்கள் மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது என வைத்து கொள்வோம். அவ்வாறான சமயங்களில் அதிக எடையுடன் இருந்தாலும் பரவாயில்லை என விமானத்தை உடனடியாக தரையிறக்குவது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏனெனில் குறிப்பிட்ட நேரம் வானில் வட்டமடித்து கொண்டிருப்பதற்கோ அல்லது எரிபொருளை வெளியே கொட்டுவதற்கோ அப்போது அவகாசம் இருக்காது. மறுபக்கம் சில தொழில்நுட்ப கோளாறுகளுக்கு உடனே விமானத்தை தரையிறக்க வேண்டியது அவசியமில்லை. அதுபோன்ற கோளாறுகள் இருந்தால், பைலட்கள் தொடர்ந்து பறந்து எரிபொருளை எரிக்கலாம். அல்லது வெளியே கொட்டலாம். சூழ்நிலையை பொறுத்து எது சரியாக இருக்குமோ? அதனை பைலட்கள் செய்யலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








