ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை அசால்டாக அபேஸ் செய்த திருடர்கள்... உஷார்...!
கன்னத்தில் மருகு வைத்துக் கொண்டு, லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டி, கழுத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு வருபவர்கள்தான் திருடர்கள் என்ற பிரம்மையை நமக்கு தமிழ் சினிமா கொடுத்து விட்டது.
ஆனால், நிஜத்தில் சும்மா ரெமோ மாதிரியிருக்கும் சில இளைஞர்கள்தான் இந்த அபேஸ் வேலைகளை குலத்தொழிலாக வைத்துள்ளனர். சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அசால்ட்டாக ஆடி காரையும், வாங்கி இரண்டு மாதங்களே ஆன பிஎம்டபிள்யூ காரையும் அதிகாலையில் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள் இருவர்.

பரபரப்போ, பதற்றமோ இல்லாமல் சூப்பர் மார்க்கெட்டில் வெங்காயத்தை எடுத்துக் கூடையில் போடுவது போல வெகு கேசுவலாக காரை லவட்டியிருக்கிறார்கள் இந்த நூதனத் திருடர்கள்.
நொய்டாவின் 17 ஏ செக்டார் பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தத் திருடர்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியும் உள்ளது. அந்தப் பகுதிக்குள் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கேட் அங்கு வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலைக்காரர்கள் வந்து செல்வதற்கு வசதியாக காலை நேரத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை திருடர்கள் தங்களது சாதகமாக பயன்படுத்திய காரை களவாடியுள்ளனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரை அந்த வீட்டின் பணியாளர்கள் கழுவிவிட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்றவுடன், மெதுவாக உள்ளே நுழையும் இளைஞர் ஒருவர், எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். பிறகு காரை விட்டு இறங்கி அந்த வீட்டுக்குள் செல்லும் அந்த இளைஞர், உடனடியாக திரும்பி வந்து காரில் ஏறிச் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஏ-37 என்ற கதவு எண் கொண்ட வீட்டுக்குள் நுழையும் மற்றொரு நபர், அங்குள்ள டேபிளின் மேல் இருந்த சாவியை எடுத்து, வாசலில் நிறுத்தியிருந்த புதிய பிஎம்டபிள்யூ காரை திருடுகிறார். அந்த கார், ரித்தேஷ் ரூப்ரம்கா என்பவருக்குச் சொந்தமானது.
அவரது தாயார் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய போதுதான் கார் களவாடப்பட்ட விஷயம் தெரிய வந்துள்ளது. இரு வீடுகளிலும் கார் திருடப்பட்டது தெரிந்து சுதாரிப்பதற்குள், திருடர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் ரூப்ரம்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும், சிசிடிவியில் பதிவான உருவத்தின் அடிப்படையிலும் போலீஸார் திருடர்களைத் தேடி வருகின்றனர்.
கண் அசந்தால் கூட நம்மையே கடத்தி விடும் உலகம்... நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்...


Click it and Unblock the Notifications








