வாகன இரைச்சலால் செவித் திறனை இழக்கும் டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சி ரிப்போர்ட்...
பொதுவாகவே, நம்ம ஊர் டிராஃபிக் போலீஸ்களைக் கண்டு நாம் சற்று பயப்பட்டாலும், உள்ளுக்குள் துளியளவும் அவர்களை மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு முழக்க, முழுக்க காரணம் அவர்கள்தான். கடமையைச் செய்வதற்குப் பதிலாக காசு கறப்பதிலேயே பெரும்பாலான டிராஃபிக் போலீஸார் ஈடுபடுவதால், அவர்களை மிகவும் இழிவாகவே இந்த சமூகம் பார்க்கிறது. வெளியே பொய்யாக நடிப்பதும், உள்ளே கண்டபடி திட்டுவதும்தான் அவர்களுக்கு நாம் தரும் மரியாதை.
சரி, அது ஒரு புறமிருக்கட்டும்... அதேவேளையில், கடமையே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நமக்காக போக்குவரத்தை சரி செய்யும் பல நேர்மையான காவலர்களும் இருக்கிறார்கள். முதல்வர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பந்தோபஸ்து, மறியல், பேரணி பாதுகாப்பு என தார் சாலைகளில் நாள் முழுவதும் தவம் கிடக்கும் எத்தனையோ சாமானிய டிராஃபிக் போலீஸாரின் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான்.

அண்மையில், நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சாலைகளில் ஏற்படும் ஒலி மாசுவால் (ஹாரன், வாகன சப்தங்கள் கொடுக்கும் இரைச்சல்) பெரிதும் பாதிப்பது டிராஃபிக் போலீஸார்தான் என்று கூறுகிறது அந்த ஆய்வு.
பெரும் தொழிற்சாலைகளில் இரைச்சலுக்கு நடுவே பணியாற்றுவதைக் காட்டிலும், இது கடினமானது என அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. வேறு வகையான வேலைகளை செய்பவர்களை விட, போக்குவரத்து ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் 50 சதவீதம் அதிகமாம்.
இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது அந்த சர்வே. மாதம் ஒரு முறை இந்தக் காரணங்களுக்காக டிராஃபிக் போலீஸார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிகிறது.
சாலைப் போக்குவரத்தை கண்ட்ரோல் செய்யும்போது காதில் இயர் போன்களை மாட்டிக் கொண்டும் வேலை செய்ய முடியாது என்பதால், இத்தகைய சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் டிராஃபிக் போலீஸார் உள்ளனர். ஒலி மாசு காரணமாக செவித் திறன் முழுமையாக பாதிக்க வாய்ப்பில்லை என்றாலும், கேட்கும் திறன் குறைவது உறுதி என்கிறார் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமலிங்கம். மொத்தத்தில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாரின் நிலை கவலைக்குரியதுதான் என்பதை தெளிவாக உணர முடிகிறது. அதேவேளையில், மக்கள் அவர்கள் மேல் இரக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம், தங்களது கீழ்த்தரமான செயல்பாடுகள்தான் என்பதை குறிப்பிட்ட டிராஃபிக் போலீஸாரும் உணர வேண்டும்.
அப்போதுதான் உங்களால் உரக்கச் சொல்ல முடியும் காவல்துறை உங்கள் நண்பன் என்று...


Click it and Unblock the Notifications








