கார் ஏற்றுமதியில் கலக்கிய ஹூண்டாய் நிறுவனம்... சென்னை துறைமுகக் கழகம் பாராட்டு...!!
ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் ரவுண்டு கட்டி அடிக்கும் அளவுக்கு வாடிக்கையாளரகளின் நன்மதிப்பைப் பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இப்போது ஏற்றுமதியிலும் சிறப்பானதொரு செயல்பாட்டை வெளிக்காட்டி, சென்னை துறைமுகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது அந்நிறுவனம். தென் இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை துறைமுகத்தின் வாயிலாகத்தான் கார் ஏற்றுமதி செய்து வருகிறது ஹூண்டாய். பொதுவாகவே சரக்குகளை கையாளுவதற்கான கப்பல் தள வாடகைக் கட்டணத்தை (Wharfage Charges) டெபாசிட்டாக துறைமுக நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்வது வழக்கம்.

குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்தாலோ அந்தத் தொகை உரிய நிறுவனங்களுக்கு திருப்பி வழங்கப்பட்டு விடும்.
அப்படியொரு சாதனையைத்தான் சத்தமில்லாமல் செய்திருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். சென்னைத் துறைமுகம் வழியாக கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து கார் ஏற்றுமதி செய்து சாதனை அளவினை எட்டியதற்காகத்தான் இந்தப் பாராட்டுகள் ஹூண்டாய்க்குக் கிடைத்துள்ளது.
இதையடுத்து கப்பல் தள காப்புக் கட்டணத்தில் ரூ. 19.70 கோடியை துறைமுக நிர்வாகம் ஹூண்டாயிடம் புதன்கிழமை (ஜூலை 27) திருப்பியளித்தது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அந்நிறுவனம் எட்டியது. இந்தச் செயல்பாட்டை கௌரவிக்கும் விதமாக ஹூண்டாய் செலுத்திய கப்பல் தள காப்புக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.
இதற்கான காசோலையை புதன்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ், ஹூண்டாய் வாகன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஓ.கே.கூ-விடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஹூண்டாய் மேலாண்மை இயக்குநர் ஒய்.கே.கூ பேசுகையில், வாகன உற்பத்தியில் ஆசியாவின் மையமாகச் செயல்பட்டு வரும் தமிழகத்திலிருந்து சென்னைத் துறைமுகம் வழியாக சுமார் 92 நாடுகளுக்கு ஹூண்டாய் நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
துறைமுக போக்குவரத்து மேலாளர் பி.விமல், முதுநிலை போக்குவரத்து மேலாளர் பிரபாகரன், ஹூண்டாய் வாகன நிறுவன முதுநிலை பொது மேலாளர் வி.ஆனந்த் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த பல்வேறு நிறுவனங்களுக்கு இதுவரை ரூ. 165 கோடி கப்பல் தள வாடகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வெற்றிக்கு டிரைவ் ஸ்பார்க்கின் மனமார்ந்த பாராட்டுகளும்... வாழ்த்துக்களும்...


Click it and Unblock the Notifications








